பக்கங்கள்

திங்கள், 10 மே, 2021

காதல்: ஓர் முதல் உரையாடல்

 Love: First Discourse


Artist: Leonardo Dudreville

Created: 1924



காதல், குடும்பம், புனிதம், பண்பாடு என்ற கற்பிதங்களைத் தாண்டி அது காதலாக மட்டுமே இருக்கிறது.


இந்த ஓவியம் ஆறு குறுங்கதைகள் போல இருக்கின்றது. காதல் என்பதை இரு தளங்களில் வைத்து காட்சி படுத்தி கேள்விக்குள்ளாக்குகின்றது.

காதல், திருமண உறவு, திருமணம் தாண்டிய உறவு, குடும்ப பாசம், தெய்வீக காதல், வயோதிக காதல் என  பல பரிமாணங்களில் உள்ள அன்பை இந்த ஒரு ஓவியத்தில் காட்சி படுத்தியிருப்பது அழகு.


Adultery ல் ஈடுபடும் காதலர்களை காட்சிப்படுத்தும் இடத்தில் 17ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு இத்தாலிய நாடகத்தை பற்றிய குறிப்பு அருமை. அந்த நாடகமும் திருமணம் தாண்டிய ஒரு காதலை மையமிட்ட கதை தான்.


மதில் மேல் இருக்கும் பூனை, கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் புறா ஆகியவை குடும்ப அமைப்பினால் உள்ளுக்குள்ளே ஒடுக்கப்பட்ட பாலியல் விழைவை குறிப்பிடவனாகவும், cupid and psychy சிற்பம் காதலையும், மடோனா மற்றும் குழந்தையின் ஓவியம் தாயன்பையும் (mother love) குறிப்பிடுவனாக உள்ளது.


இந்த ஓவியம் பற்றி இன்னும் அதிகம் உரையாடலாம்.

சமூக பண்பாட்டு உளப்பகுப்பாய்வு மூலம் இந்த ஓவியத்தை அணுகினால் இன்றைய குடும்ப அமைப்பு, காதல் பற்றிய புரிதலும் அதில் உள்ள முரண்களையும் அறிந்து கொள்ள முடியும்.


ஒரு Anthology படத்தின் கதையை போல இந்த ஓவியம் உள்ளது.

திங்கள், 1 மார்ச், 2021

மாஸ்டர்: மேலானவற்றின் கருத்தியல்


மாஸ்டர் படத்தில் ஒரு காட்சி. அந்த படத்தின் நாயகன் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருக்கும் புகைப்படம். The essential: Zizek என உள்ளது. யார் ஜிஷெக். அந்த புத்தகம் எதைப்பற்றியது.

ஒரு உச்ச நடிகர் மூலம் ஒரு புத்தகத்தை வெகு தளத்தில் பொது மக்களிடையே அறிமுகப்படுத்தும் பாணி சமீபத்தில் திரைப்படங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் காண முடிகின்றது.

ஒரு முன்னணி நடிகரின் மூலம் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்துவது தமிழ் சமூகத்தில் நடைமுறையில் கொஞ்சம் சிக்கலானது தான். அதை முன்னணி நடிகர்கள் செய்து வருவது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் ஒரு நடிகனுக்கும் ரசிகனுக்குமான உறவில் அது தேவையற்ற ஒன்று. ஒரு நடிகன் தனது ரசிகனை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது.


"எந்த ஒரு முன்னணி நடிகரும் தன் பிறந்த நாளுக்கு இரத்ததானம் செய்யுங்கள், நற்பணி மன்றங்கள் மூலம் சமூகத் தொண்டு செய்யுங்கள் என அறிவுறுத்தலாம். ரசிகர் மன்றங்களை கலைக்கலாம். திரைப்படங்களில் அரசியல் குறித்து பஞ்ச் டயலாக் பேசலாம். பேனர், கட்அவுட், பாலபிஷேகம் செய்யாதீர்கள் என அன்புக் கட்டளைகள் இடலாம்.

ஆனால் எந்த உச்ச நட்சத்திரமும் தன் ரசிகர்களை படி என்று சொல்வதில்லை. சொன்னால் அவன் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டு அவன் வேலையை பார்க்கப் போயிடுவான்."

என ஒரு இணைய பகிர்வை படிக்க நேரிட்டது.

நடிகர் கமல் பல ஆண்டுகளாகவே நேர்காணல்களில் அவர் வாசித்த புத்தகங்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட வாரம் ஒரு புத்தகம் என அறிமுகப்படுத்திவந்தார். 

கபாலி படத்தில் ரஜினி சிறையில் My Father Name is Balayya என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பார். காலா படத்தில் தன் மேசையில் இராவண காவியம் புத்தகத்தை வைத்திருப்பார்.

எஸ். பி. ஜனநாதன், மிஷ்கின் ஆகியோர் படங்களிலும் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதை காணலாம்.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் புகைப்படத்தில் ஒன்று, அந்த படத்தின் நாயகன் விஜய் தன் கையில் The Sublime object of the Ideology எனும் புத்தகத்தை வைத்திருப்பார்.

தத்துவ உலகின் சூப்பர்ஸ்டார் என கருதப்படுகின்ற ஸ்லோவினிய அறிஞர் ஸ்லவோஜ் ஜிஷெக் அவர்கள் 1989ல் எழுதிய புத்தகம். அவர் எழுதியதில் மாஸ்டர்பீஸ் இந்நூல்.

கார்ல் மார்க்ஸ் ன் கருத்தியலையும், சிக்மண்ட் ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு நூலான கனவுகளின் விளக்கம் நூலின் சாரம்சத்தையும் இணைத்து பார்க்கின்றது இந்நூல்.

உழைப்பு - உற்பத்தி ஆகியவற்றிற்கு இடையேயான வர்க்க முரண்கள் தான் முதலாளித்துவம் என்கிறார் மார்க்ஸ். உழைப்பவனுக்கு, அவன் உற்பத்தி செய்கின்ற பொருள் என்பது அவனுக்கு சொந்தமல்ல. அவனுடைய முதலாளிக்கு சொந்தமானது. உழைத்து முடித்த பிறகு அந்த பொருளிலிருந்து உழைப்பாளி அந்நியமாகிவிடுகிறான். அது உழைப்பவனுக்கு சொந்தம் என பொதுவுடைமை தத்துவம் பேசிய கலகக்கார அறிஞர் காரல் மார்க்ஸ்.

ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கும் ஒருவன் அந்த துணியை விற்க தான் முடியும். அதிக விலையுள்ள துணியை வாங்கும் அளவுக்கு வசதி இருப்பதில்லை. இந்த வர்க்க முரண்களை கலைக்க சிந்தித்தவர் தான் மார்க்ஸ்.

கனவுகள் என்பது ஆழ்மனதின் வெளிப்பாடு என விளக்கம் கொடுத்தவர் சிக்மண்ட் ப்ராய்டு.

இந்த இரண்டு முக்கிய தத்துவங்களையும் இணைத்து விவாதித்து இருக்கிறார் இந்த நூலில்.

துணிக்கடையில் வேலை பார்க்கும் ஒருவனுக்கு விலை உயர்ந்த ஆடை எவ்வாறு அந்நியப்பட்ட ஒன்றாக ஆனது. அவன் விலை உயர்ந்த ஒரு ஆடையை அணிந்திருப்பதாக கனவு காண்பது என்பது உளவியல் சார்ந்த ஒன்று மட்டுமல்ல. அது சமூக கருத்தியலோடு தொடர்புடையது என்கிறார் ஜிஷெக்.

இந்த நூலை ஒரு முன்னணி நடிகர் தன் படத்தின் மூலம் வெகு மக்களிடையே அறிமுகப்படுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கது.

ஆனால் அந்த படத்திற்கும் இந்த புத்தகத்திற்கும் சம்மந்தமில்லை என்பது வேறு.

அனிருத் கத்த வாத்தி கம்மிங் பாட்டு சத்தமாக ஒலித்திக் கொண்டிருக்கிறது. ரசிகன் அடுத்த பட அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். 

சனி, 20 பிப்ரவரி, 2021

மகிழ்ச்சி என்பது...

மகிழ்ச்சி என்பது...

அறிவே இன்பமான வாழ்விற்கு அடிப்படை என அரிஸ்டாட்டில் சொல்கிறார். சக மனிதரை நேசிக்கின்ற, சுதந்திரமான சிந்தனையே இன்பம் தருகின்ற அறிவு. 

கொஞ்சம் விசயங்கள் தெரிந்திருத்தலே மகிழ்ச்சி என எபிக்கிரஸ் சொல்கிறார். மற்றவரைவிட கொஞ்சம் அதிகமான உண்மைகளை தெரிந்து கொண்டவர் நிம்மதியாக இருப்பதில்லை. ஆகவே எல்லாவற்றையும் அறிந்து கொள்ளாமல் கொஞ்சம் உண்மைகளை மட்டும் அறிந்து கொள்ளுங்கள் அதுவே ஆனந்தம் என்கிறார். எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டால் நிம்மதியாக இருக்க முடியாது. எல்லா கேள்விகளுக்கும் பதிலை தேடிச் சென்றால் கவலைகள் தான் மிஞ்சும். மகிழ்ச்சி என்பது குறைந்த அளவு அறிந்திருத்தல். உண்மையின் நிர்வாணம் கவலைகளைத் தரவல்லது. 

சும்மா இருப்பதே மகிழ்ச்சி என நீட்ஷே சொல்கிறார். சும்மா இருப்பது ஒன்னும் அவ்ளோ ஈசி இல்லைனு வடிவேலு சொல்கிறார். சும்மா இருக்க முடியலனாலும் சும்மா இருக்க ட்ரை பண்ணா போதும். உம்முன்னும் கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.

பயணித்துக் கொண்டிருப்பதே மகிழ்ச்சி என்கிறார் அரேபிய ஞானி இபின் ருஷ்டி.
சாலைகள் கடவுளின் உறைவிடம். கடவுளை தேடுதல், மனிதர்களோடு பயணித்தல், அவர்களிடம் கடவுளை காண்தலே இன்பம். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. எளிய மனிதர்களின் இன்பத்தில் கடவுளை கண்டடையும் வழியே அரசியலாக, தத்துவமாக முன்னிறுத்தினர். சாலை முனைகளில் கடவுள் காத்துக் கொண்டிருக்கிறார். அவரோடு ஒரு டீ அருந்தியாவாறு மகிழ்ச்சியாய் இருப்போம்.

சுதந்திரமாய் இருத்தலே மகிழ்ச்சி என்கிறார் ஜார்ஜ் ஆர்வெல். யாரையும் அடிமைப் படுத்தாமல், யாருக்கும் அடிமையாய் இல்லாமல் இருக்கும் சுதந்திர உணர்வே மகிழ்ச்சி. மனதின் சிறைகளை உடைத்து சுதந்திரமாய் இருத்தலே பெரு மகிழ்ச்சி. 

நீங்கள் இழந்த உங்கள் சுயத்தை மீண்டும் கண்டடைவதே மகிழ்ச்சி என்கிறார் மார்க்கோஸ். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் செய்யும் பிழைகளில் நம் சுயத்தை இழந்திருப்போம். தவறுகளில் இருந்து மீண்டு தன் இயல்பினை அடைதலே ஆனந்தம். நாம் இழந்த நம்மை மீட்டெடுத்தலே மகிழ்ச்சி.

மகிழ்ச்சி என்பது ஒன்றை முழுதாய் நம்புதல் என அல் பராபி சொல்கிறார். பொய், ஏமாற்றம், துரோகம் என ஐயம் கொள்ளாமல் முழுதாய் ஒன்றை நம்புவது. பலி பீடமாக இருந்தாலும் முழுவதுமாக ஒருவரை நம்பி தலையை, கொடுப்பதே பெரு மகிழ்ச்சி. கேள்விகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றை/ஒருவரை முழுதாக நம்புதலே மகிழ்ச்சி.

குடும்பத்தோடு ஒன்றாய் இருப்பதே மகிழ்ச்சி என விக்டர் ஹ்யூகோ சொல்கிறார். உறவுகளோடு இணக்கமாய் இருப்பது, புரிதலோடு இருப்பது, உறுதுணையாய் இருப்பது, நெறி தவறும் பட்சத்தில் கண்டிப்பாய் இருப்பது என உறவுகள் சூழ இருப்பது சமூகத்தில் ஒருவனை மகிழ்ச்சியாக இருக்க வைக்கின்றது.

மகிழ்ச்சி என்பது நாம் செய்கின்ற செயலை விரும்பி செய்வது என ஜேம்ஸ் பெர்ரி சொல்கிறார். இன்னது தான் பிடிக்கும், இதைத் தான் செய்வேன் என ஆசைப்பட்டு செய்வதைவிட, தான் செய்கின்ற செயலை ரசித்து விரும்பி செய்வதே மகிழ்ச்சி என்கிறார். பெரிதாக கனவுகளை வளர்த்துக் கொள்ளாமல் தனக்கு வாய்த்ததை விரும்பி ஏற்றுக்கொள்வதே மகிழ்ச்சி என்கிறார்.

மகிழ்ச்சியாய் இருப்பது என்பதே நெறியற்ற ஒன்று என ஜிஷேக் சொல்கிறார். அறத்தோடு வாழ்பவனுக்கு மகிழ்ச்சி என்பது சிறு புள்ளி தான். அதை பொருட்டாகவும் நினைப்பதில்லை. மகிழ்ச்சி என்பது அறமற்ற ஒன்று.
அறம் செய்ய பழக வேண்டும் அல்லது அறமற்றதை கொண்டாட பழக வேண்டும்.

மகிழ்ச்சி என்பது குறைந்த அளவு துயர்.

வெள்ளி, 29 ஜனவரி, 2021

காலம் பதில் சொல்லும்

காலம் பதில் சொல்லும்
என்ற கடைசி வாசகத்தோடு
அநாந்தரத்தில் விடப்பட்டேன்

காலத்தின் பதிலை 
அறிந்துகொள்ள பொறுமையில்லாமல்
காலத்தோடு மல்லுகட்டினேன்
பதில் என்ன என அறியாமல்
ஆயிரம் கேள்விகளை 
கேட்டுக் கொண்டிருந்தேன்

ஒவ்வொரு வினாக்களும்
எதிர்காலத்தின் மீது வில் தொடுத்தது
விடை தேடும் பயணம்
நிகழ் காலத்தை ரணமாக்கியது
விடையறியா வினாக்களோடு
கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டேன்

காலத்தின் புதிர் பாதையிலிருந்து
மீள்வதற்கான கடவுச்சொல் 
ஒரு பதிலாய் இருந்தது. 

அந்த பதில்
"காலம் பதில் சொல்லும்"

- பாரதி ஆரா