பக்கங்கள்

திங்கள், 29 ஜூலை, 2013

ஆதிக்கத்தின் மச்ச அவதாரம் - மரியான்

கோமுகன் என்பவன் வேதங்களைத் திருடிக் கொண்டு மீன் வடிவில் கடலுக்குள் ஒளிந்து கொண்டதாகவும், அதைக் கண்டுபிடிக்க திருமால் என்பவன் மீன் வடிவில் சென்று அவனை அழித்து வேதங்களை மீட்டு வந்ததாகவும் கதைகள் கூறுகின்றன. இதில் இருவருமே மீன் அவதாரம் எடுத்துள்ளனர். ஆகையால் யார் எடுத்தது மச்ச அவதாரம் என்பதனை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன்...

ஒரு கலைப் படைப்பு என்பது அந்த சமூகத்தினைக் குறித்த சமகாலப் பதிவாக இருக்க வேண்டும். ஆனால் திரைப்படங்கள் அவ்வாறு இருப்பதில்லை. திரைப்படங்கள் என்பது மக்களை ஒடுக்கும் ஒரு கருத்தியல் ஆயுதமாக இருந்து வருகின்றது. இந்த ஆயுதம் ஆதிக்கவாதிகளின் கைகளில் தான் இன்னும் இருந்து வருகின்றது. ஆகையால் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது அதனை ஒரு கலைப்படைப்பாக மட்டும் பார்க்காமல், அதனை சமூகத்தின் வெகுசனப் பார்வையின் மீதான ஒரு அதிகார வெளிப்பாடாக காண்பது சரியானதாக இருக்கும்.

கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியினை நெய்தல் திணை என்பர். இந்தப் பகுதியில் வாழ்பவர்கள் பரதவர் ஆவார். பரதவர்களின் பிரதான தொழில் மீன் பிடித்தல், முத்துக்குளித்தல் ஆகியன என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இந்த திணையின் உரிப்பொருள் இரங்கல். தலைவனுக்காக தலைவி காத்திருப்பது தான் நெய்தல் திணையின் உரிப்பொருளாக கூறுகின்றனர். திணையியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுதான் பெரும்பாலான இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன.

மரியான் படத்தின் கதைக் களம் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள நீராடி எனும் கடற்கரைப் பகுதி. கதை நாயகன் மீனவர். இந்த கதை நீராடி கிராமத்தில் இருந்து சூடான் நாட்டுக்கு பயணிக்கின்றது. தமிழ் நாட்டில் உள்ள மீனவர்களுக்கு சூடான் நாட்டில் இருப்பவர்கள் எதிரி போல இந்த கதை வெகுசன பார்வையாளர்களிடம் ஒரு கருத்தை உருவாக்க முயலுகின்றது. அதில் வெற்றியும் பெற்றுள்ளதை படத்தின் வசூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

இந்த படம் பார்வையாளர்களின் பொதுப்புத்தியினை வெகுசனத் தளத்தில் மடைமாற்றம் செய்யும் ஒரு முயற்சி. தமிழ் நாட்டு மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இலங்கை இராணுவம். எல்லை தாண்டி வருகின்றனர் எனக் கூறி தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருவதை செய்தித் தாள்களின் மூலம் அறியப்படுகின்றது. செய்தித்தாள்களில் மீனவர்களுக்கு தமிழன் என்ற அடையாளத்தைக் கொடுக்கின்றவர்கள் இந்த திரைப்படத்தில் இந்தியன் என்ற ஒரு தேசிய அடையாளத்தைப் பூசி சூடான் நாட்டினரை எதிரியாக்கியுள்ளனர். ரோஜா படத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ளவர்களையும், பாகிஸ்தானியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து நாயகனின் மூலம் தேசியத்தை மக்களின் பொதுப் புத்தியின் மேல் உருவாக்கியது போல, இந்த படமும் உருவாக்கியுள்ளது. 

பிரெஞ்சு புரட்சியின் போது மக்களிடையே அரசின் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு கருத்தாக்கம் தான், "தேசியம்". அரசு மற்றும் மக்களிடையே உள்ள உறவின் அதிகார வடிவம் தான் தேசியம் என்ற கருத்தாக்கம். மேற்கத்திய சூழலில் உருவான இந்த கருத்தாக்கம் இந்தியா (வேறு வார்த்தை கிடைக்கவில்லை) போன்ற பன்மியத் தன்மை கொண்ட ஒரு சமூகத்திலும் திணிக்கப்பட்டுள்ளது. மரபார்ந்த இனக்குழு அமைப்பு சிதைவுற தேசியம் அடிப்படையாக அமைந்தது எனலாம். உலகமயமாக்கலின் காரணமாக தேசியம் என்ற கருத்தாக்கம் அரசின் வாயிலாக மக்களிடையே தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு வடிவம் தான் பள்ளி பாடத்திட்டம், விளையாட்டு மற்றும் திரைப்படங்கள்.

இன்று வரை தமிழகத்தில் மக்கள் ஒடுக்கப்படுவதற்கு வேதங்களும், அதனையொட்டி உருவான சாதி மற்றும் ஆச்சாரம் என்று கூறிக் கொள்ளும் சில அபத்தங்களும் தான். இந்த படம், கடலில் இருந்து சில அபத்தங்களை திரையரங்கு வாயிலாக மக்களின் பெருந்திரள் நினைவுகளை ஆட்கொள்ள உருவெடுத்த ஒரு மச்ச அவதாரம் எனலாம். சமீபத்தில் வெளிவந்த நீர்ப்பறவை, கடல் ஆகிய இரு படங்களின் தொடர்ச்சியாக இப்படத்தை கருதலாம்.

திங்கள், 15 ஜூலை, 2013

இன்னும் ஒளிந்திருக்கும் சாதி

சமூக அசைவியக்கத்தினை அறிந்து கொள்ள அதன் பன்மியத் தன்மைகளை புரிந்து கொள்வது இன்றியமையாததாகின்றது. உலகமயமாக்கப்பட்ட சூழலில், சமூக மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்வது முக்கியமாகின்றது. தமிழகத்தில் சமூக அசைவியக்கத்தினை புரிந்து கொள்ள வரலாற்று அடிப்படையிலான சமூக பார்வை அவசியமாகின்றது. இங்கு வர்க்க பேதங்களைக் காட்டிலும் சாதிய படிநிலைகளைக் கொண்டே சமூக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது கவனிக்கத்தக்கது.

சமூகத்தில் ஒரு குழு தனது இருப்பினை, மற்றொருவர் மீது அதிகாரம் செலுத்துவதின் மூலம் உறுதி செய்கின்றது. அதிகாரத்தின் வடிவங்கள்,
  • பிற சமூகத்தினருடனான உணவுப் பரிமாற்றங்கள் 
  • மரபு மற்றும் பாரம்பரியங்களை (சடங்குகள்)
  • சொத்து மற்றும் நிலவுடைமை 
  • அகமணமுறை 
சமூகத்தில் சாதி என்பது, பிறப்பு, தொழில் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் மூலம் பகுக்கப் படுகின்றது. 
வேத காலத்தில் சாதி என்பது பிறப்பின் அடிப்படியில் இல்லை. தாசி பெண்ணின் மகனாகப் பிறந்து, சூதாடும் மனைகளில் வளர்ந்தவரென்ற போதிலும், கவாக்ஷ மகரிஷி ஞானம் உடையவராகத் திகழ்ந்தார். வேத மந்திரங்களை ஞானக் கண்ணால் கண்ட மந்திர திரஷ்டா எனப்படும் மிகவும் உயர்ந்த ஆன்மிக நிலையில் வாழ்ந்த மகரிஷி அவர். அவரால் அருளப்பட்ட வேதமந்திரங்கள் மிக உயர்ந்த முக்தி நிலையை அளிப்பவை. அவரே சரஸ்வதி நதி தீரத்தில் நடந்த சோமயாகத்தின் எஜமானராக இருந்தருளினார் (ரிக் வேதம் - ஐதரேய  பிராம்மணம்). அவரே நீர் நிலைகளைக் கட்டுப்படுத்திய சுயநலவாதிகளை அழித்து நீர் நிலைகளை மக்களுக்கு பொதுவான வளமாக ஆக்கினார் (சாமவேதம் - கௌஷீதகீ பிராம்மணம்).
(http://www.santhan.com/index.php/cast1176)
வேத காலத்தில் பிறப்பின் அடிப்படையில் சாதி இல்லை என்பதை அறிய முடிகின்றது. ஆனால் பின்னாட்களில் சாதி தன்னுடைய வடிவங்களை மாற்றிக் கொண்டே வந்துள்ளது.

உணவில் ஒளிந்திருக்கும் சாதி:
  • உணவின் தன்மை மற்றும் உண்ணும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாதியக் கட்டுமானங்கள் சமூகத்தில் இருந்து வந்துள்ளன. உணவை விளைவிப்பவன் விவசாயியாக இருந்தாலும், மூலதனம் - உற்பத்தி - உழைப்பு ஆகியவற்றின் காரணமாக அவனுக்கான உணவைப் பெற முடிவதில்லை. அதனால் தான் உணவுப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற பாராளுமன்றத்தில் அரசியல் விளையாட்டுகள் அரங்கேறி வருகின்றன. மூலதனம், உழைப்பு, உற்பத்தி ஆகியன சமூக வேறுபாடுகள் உருவாக ஒரு புறக்காரணி மட்டுமே. சமூக வேறுபாடுகள் உருவாக சாதி தான் அடிப்படியாக இருக்கின்றது.
  • உணவு சுவையானது, ஆரோக்கியமானது மட்டுமன்று. அது சமூக அடையாளங்களை உருவாக்குகின்றது. இன்றும் கிராமங்களில் சில சாதியினர் உணவை உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை. குத்துக் காலிட்டு அல்லது நின்று கொண்டு தான் உண்ண வேண்டும்.(2013 ஆம் ஆண்டில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஒரு சிற்றூரில் கல்யாண விருந்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர், அனைவரும் சாப்பிட்ட பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் என கருதுபவர்கள் கீழே அமர்ந்து சாப்பிட்டனர்.) அசைவ உணவு என்பது குறிப்பாக மாடு மற்றும் பன்றி ஆகியன இழிவான ஒரு உணவு என்ற கருத்து நிலவி வருகின்றது. மாடு மற்றும் பன்றி இறைச்சி உணவு உண்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. உலகமயமாக்கத்தினால் உணவுப் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சாதி என்ற கருத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்றைய உணவகங்களை பற்றிய அரசியலை புரிந்து கொள்வது அவசியமாகின்றது. 
  • விருந்தோம்பலில் முக்கியமானது சாப்பிட்ட இலையை அல்லது தட்டை உணவு பறிமாரியவரே எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த விருந்து இருவருக்கும் திருப்திகரமானதாக இருக்கும். நுகர்வு மயமான சூழலில் உணவகங்களில் சாப்பிட்ட இலையை எடுப்பது என்ற நிகழ்வு பல வித அர்த்தங்களை உருவாக்குகின்றது. சில இடங்களில் சாப்பிட்டவர் தங்கள் இலையை தாங்களே எடுக்க வேண்டும். அத்தகைய உணவகங்களை கூர்ந்து நோக்கும் பொழுது உணவாக உரிமையாளர், உணவு நுகர்வோர் ஆகியோருக்கு இடையேயான சாதிய வேறுபாடுகளை அறியமுடியும். உணவின் சாதிய அதிகார படிநிலைகளை புரிந்து கொள்ள உணவக உரிமையாளர், உணவு பரிமாறுபவர், உணவு உண்பவர் (நுகர்வோர்), இலையை எடுப்பவர் ஆகியோருக்கு இடையேயான உறவுநிலைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். உணவகங்கள் அமைந்துள்ள சூழலும் இந்த வேறுபாடு வெளிப்பட காரணமாக உள்ளது.
  • "வாயப் பாரு வண்ணாந் தாளியாட்டும்" என்ற பேசுகின்ற ஒரு வசவுச் சொல்லின் பின்னால் ஒரு சமூக வரலாறு புதைந்துள்ளது. வண்ணார் சமூகத்தினர் அழுக்குத் துணிகளை துவைத்ததற்கு கூலியாக அந்திப் பொழுதில் அவர்களின் வீட்டு பின் வாசல் வழியாக சென்று சோறு வாங்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வீடாக சென்று சோறு வாங்க வேண்டும். இதற்கு "ஊர்ச்சோறு" என்று பெயர். (பழைய தமிழ்ப் படங்களில் இந்த காட்சியை காணலாம். குறிப்பாக பாரதிராஜாவின் "கல்லுக்குள் ஈரம்" திரைப்படத்தில்.)
  • ராமநாதபுரம் வட்டார எழுத்தாளர் வேல.இராமமூர்த்தி, சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களான அம்பட்டர், அருந்ததியர், சக்கிலியர், பகடை, வண்ணார் முதலானவர்களின் மீதான சாதிய வன்முறைகளை இவரது சிறுகதை சுட்டுகின்றது. ’ஆசை... தோசை...’ என்ற கதையில் ஒரு அம்பட்டர் ஓட்டலில் மேசையில் அமர்ந்து சாப்பிட்டதால் செருப்படி விழுந்ததை சுட்டுகின்றார்.
    ஊருகஞ்சி வாங்கிகுடிக்கிற வண்ணாப்பயளுக்கு என்ன திமிரு இருந்தா... கழுதைகளை விட்டு என் வெள்ளாமையை அழிப்பீங்க...! (வேலராமமூர்த்தி கதைகள், 2011 - 110) என ஆதிக்க சாதி தோப்புக்காரன், வண்ணானை அடித்துக் கொன்று விடுகின்றான்.
  • ஜெர்மன் சமூகவியல் அறிஞர் டோனீஸ் (Ferdinand Tönnies) சமூகம் மற்றும் சமுதாயம் (Gemeinschaft and Gesellschaft) என்பது பற்றி குறிப்பிடுகின்றார். அதில் சமூகம் என்பது, "ஒரு புறம் உறவுகள் மற்றும் சடங்குகள், பாரம்பரிய மரபுகளையும் மற்றொரு புறம் தனது நிபுணத்துவம் மற்றும் சுய ஆர்வங்களையும் ஒருங்கிணைக்கின்றது". நகரமயமாக்கல் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு பிறகு முதன்மையாக இருந்த விவசாயிகள் இரண்டாம் பட்சமாக மாற்றப்பட்டனர்.  அவர்களது சடங்குகளும் இரண்டாம் தரமானதாக மாறியது. இந்த கண்ணோட்டத்தில் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றும் நிகழ்வினை காண வேண்டியது அவசியமாகின்றது. தமிழ் திரைப்படங்களில் கூழ் ஊற்றும் சடங்கு பற்றி உருவாக்கியுள்ள தொன்மம் என்பது, கூழ் ஊற்றுபவர்கள் ரவுடிகள், ஏமாற்று பேர்வழி, பிச்சைக்காரர்கள் என்பதாகும். அதே வேளையில் நிறுவன கோயில்களில் அன்னதானம் வழங்குபவர்கள் உயர்வானவர்களாக சித்தரிக்கப் படுவதின் மூலம் அதிகாரம் எவ்வாறு நிலை நாட்டப் படுகின்றது என்பதனை உணர வேண்டியது அவசியம்.
  • ஆடி மாதங்களில் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் நிகழ்வும், ரமலான் நோன்பில் இஸ்லாமியர்கள் அளிக்கும் நோன்புக் கஞ்சிக்கும் இடையே உள்ள பண்பாட்டு ஒற்றுமைகளை காணலாம்.

தொழிலில் ஒளிந்திருக்கும் சாதி:
  • சாதி என்பது தொழில் அடிப்படையிலும், வாழ்க்கை முறை அடிப்படையிலும் இருந்து வந்தது. நகரமயமாக்கலுக்கு பிறகு மக்களின் தொழிலும், வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. வேதங்களை ஓதுதல், கற்பித்தல் போன்ற செயல்களை செய்தவர்கள் பிராமணர்கள் என்றும்,  கொட்டடித்து செய்திகளை ஊருக்கு சொல்லியவர்கள் பறையர்கள் என்றும், தோலை பதனிட்டு தோல் சார்ந்த வேலைகளை செய்தவர்கள் சக்கிலியர் என்றும், மருத்துவ வேலைகளை செய்து வந்தவர்களை அம்பட்டர் என்றும், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வியாபாரங்களை செய்தவர்கள் கோனார் என்றும், கோவில்களில் இசையமைத்து வந்தவர்கள் நாவிதர் என்றும், தொழில் ரீதியான சாதி பகுப்புகள். ஆனால் இந்த வரையறைகள் எல்லாம் உலகமயமாக்கத்தினால் உண்டான நுகர்வு பண்பாட்டின் மூலம் தகர்த்தெரியப் பட்டுவிட்டன.
  • நுகர்வு பண்பாட்டில் தகர்த்தெறியப் பட்ட சாதிய வரையறைகளில் பல முரண்பாடுகளைக் காணலாம். கற்பித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள் பிராமணர்கள் எனின் இன்று ஆசிரியர் பணியில் பலதரப்பட்ட சாதியினர் உள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் பிராமணர் என்று குறிப்பிட முடியாது. கொட்டடித்து செய்திகளை ஊருக்கு சொல்லியவர்கள் பறையர் எனின், இன்று உள்ள ஊடக முதலாளிகளையும், நிருபர்களையும் பறையர் எனக் குறிப்பிட முடியாது. இதனால் சமூகத்தில் சாதி ஒழிந்துவிடவில்லை. ஒளிந்துக்கொண்டுள்ளது.

யோனியில் ஒளிந்திருக்கும் சாதி:
சாதி என்ற சொல் "ஜாதி" என்ற வட மொழிச் சொல்லில் இருந்து உருவானது. "ஜா" என்ற வட மொழிச் சொல்லுக்கு பிறப்பு என்று பொருள். வனஜா, கிரிஜா போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளது. இதன் அர்த்தம், வனஜா - வனத்தில் பிறந்தவள், கிரிஜா - கிரித்திகை நட்சத்திரத்தில் பிறந்தவள் என்று பொருள் படும்.
இவ்வாறு தொ.பரமசிவன் தன்னுடைய நூலில் குறிப்பிடுகின்றார். 
சாதி என்பது தமிழக பண்பாட்டு சூழலில், ஒரு பண்பாட்டு மீறலாக இருக்கின்றது. மனு தர்மங்களும், அரசியல் கட்சிகளும், சாதி நிறுவனங்களும், இந்த பண்பாட்டு மீறலை நியாயப் படுத்தி வளர்த்துவிடுகின்றன.

ஒரு சமூகத்தின் சாதி என்பது, அந்த சமூகத்தினரின் திருமண முறையில் தான் இன்று வரை மாற்றமின்றி வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் இங்கு சாதி வெறிக் கொலைகள் (கௌரவக் கொலைகள்) இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இனக்குழு மரபில் வாழ்ந்த சமூகங்களில் "அகமணமுறை" என்பது இருந்து வந்தது. தாய்வழிச்சமூகத்தின் எச்சமாக இன்றும் ஒரு குடும்பத்தின் மரியாதைச் சின்னமாக பெண்கள் இருக்கின்றனர். சமூக நீதிக் காவலர்கள் என்றுக் கூறி சாதியை காப்பாற்றும் ஆண்கள் தங்கள் சாதியை யோனியில் ஒளித்து வைத்துள்ளனர். தமிழக வரலாற்றில் சாதிய வன்முறைகளை ஒரு முறை புரட்டி பார்க்கும் போது அது பெரும்பாலும் பெண், நிலம் மற்றும் நீர் சார்ந்தே இருந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். (நிலம், நீர் ஆகியன பெண்ணாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.) மதுரைவீரன், காத்தவராயன், முத்துப்பட்டன் ஆகியோர் கதைகளில் சாதிய வன்முறை பெண்களை மையமிட்டே நிகழ்ந்துள்ளது. ஆனால் சாதிய வன்முறைகளுக்கு பெண்கள் காரணமன்று. தமிழக வரலாற்றில் மகண் மறுத்தல் (பெண் மறுத்தல்) என்பதன் பின்னாலும் சாதி உள்ளது. கிராமங்களில் உள்ள பெண் தெய்வங்களின் கதைகள் மகண் மறுத்தலின் காரணமாக தன் பெண்ணை அந்த குடும்பத்தாரே கொன்று தெயவமாக வழிபட ஆரம்பித்தனர் என்ற உண்மை விளங்கும்.

புதன், 3 ஜூலை, 2013

'பண்'பாடும் பண்பாடு


The Express Tribune
  • சில இசைக் குறிப்புகள்:
    - கலைத்தன்மைக் கொண்ட ஒரு இசைக்குறிப்பன்று. இசை குறித்த சில சமூக அவதானிப்புகள்.

    • மனிதமனம் அடிப்படையில் குரூரமான வன்மத்தையும் காமத்தையும் தன் ஆழ்மனதில் புதைத்து வைத்துள்ளது. பண்பாடு என்பது குரூரமான மனித மனதினை கட்டுப் படுத்தும் ஒரு நெறிமுறையாக உள்ளது. அந்த பண்பாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு வெளிப்படுத்தப்படும் குரூர எண்ணங்களே கலைப் படைப்புகள் ஆகின்றன. கலை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வளர்ச்சியும் பண்பாட்டு மாற்றங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஓவியம், சிற்பம், இயல், இசை, நாடகம் ஆகிய கலைகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக கருதப்படுகின்றது. 
    • இசை என்பது வெறும் கலை வடிவம் மட்டுமன்று. அது சமூக பண்பாட்டு பொருளாதரத் தளத்தில் பல அர்த்தங்களை கொடுக்கின்ற ஒரு பிரதியாக உள்ளது. இசை என்பது சமூக வரலாற்று நினைவுகளாகவும், பண்பாட்டு அடையாளமாகவும் விளங்குகின்றது. அவற்றை இசை வெளிப்பாட்டு முறைமைகளில் நேரிடையாக காணலாம். நாட்டார் வழிபாட்டில் ஒரு நிகழ்வான சாமியாட்டம் எனும் நிகழ்வு தொல் சமூகத்தினரிடையே இருந்த போர் நடனத்தின் நீட்சியாகவே காணப்படுகின்றது.
    • தமிழர்களின் வாழ்வில், ஆடலும் பாடலும் என்பது இறைவழிபாட்டோடும், சடங்கியல் முறையிலும் அன்றாட வாழ்வோடு இணைந்த ஒன்றாக உள்ளது. தாலாட்டு பாடல் முதல் ஒப்பாரி வரை ஒவ்வொரு செயல்களும் இசையுடன் இணைந்தே உள்ளது. நாட்டார் கதைப் பாடல்களை, "கடந்த கால நினைவுகளுக்கும், நிகழ்கால நிகழ்வுகளுக்கும் உள்ள முரண்பட்ட தொடர்பு" என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளலாம். மதுரை வீரன், காத்தவராயன் கதை, கான்சாகிபு சண்டை போன்ற நாட்டார் கதைப் பாடல்களில் காணப்படும் சோக முடிவுகளை, கடந்த கால வரலாறு - மக்களின் நினைவுகள் - சமகால சாதிய ஆதிக்கம் ஆகியவற்றோடு தொடர்பு படுத்தி காணலாம்.
    • பிரெஞ்சு அறிஞர்  Jacques Attali தனது Noise: The Political Economy of Music என்ற நூலில் இசை என்பது கொலைச்செயலின் கலைவடிவமாக உள்ளது எனக் கூறுகின்றார். தொன்மை சமூகத்தில் இசை என்பது போர் பற்றிய நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்யும் ஒரு கலை வடிவமாக இசை உள்ளது. இசை என்பது ஒரு பண்பாட்டு அடையாளம். அது இனவரைவியல் கூறுகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. ஒரு சமுகத்தின் தனிப்பட்ட மற்றும் கூட்டாண்மை நினைவுகள் இசை மூலம் உருவாக்கப்படுகின்றது.
    • இசைக்கு மொழி இல்லை, அது ஒரு உலகப்பொது மொழி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் என்றாலும் இசை இயல்பில் அப்படி இல்லை. இசை தனக்கென ஒரு மொழியையும், தளத்தையும் கொண்டுள்ளது. 
    • மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் படி, முதலாளியம் என்பது ஒரு பெரு அமைப்பு. பண்டம் என்பது அதன் அடிப்படை அலகு. இன்றைய சூழலில் முதலாளிய சந்தைப் பண்டங்களுள் ஒன்றாக இசை திகழ்கின்றது. இசைக்கலைஞன், இசைக்கருவி, இசை ஆகியவற்றிற்கு இடையே உள்ள உறவு என்பது வெறும் கலைத்தன்மை வாய்ந்தது மட்டுமன்று. அது சமூக எதார்த்தங்களை பிரதிபலிக்கின்றது. "மூலதனம் சார்ந்து இயங்குகின்ற தொழில் நிறுவனங்களை காட்டிலும் கலைத் துறையில் பல தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்." (Zeidler, 2000, Entertainment and Internet collision course ahead).
    • சாலை முனைகளிலும், தொடர் வண்டிகளிலும் பாடல் பாடி யாசகம் கேட்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இசையின் அடிப்படைத் தன்மைகளை உணர்ந்த ஒரு நல்ல அறிஞர்களாக திகழ்கின்றனர். அதன் நேரெதிராக இசையை அதிகாரத் தன்மையோடு பயன்படுத்தும் ஒரு ஏகாதிபத்யவாதியாக திரை இசை, மேடைக் கச்சேரிகள், தொலைகாட்சிகள் மற்றும் பண்பலை ஆகியன திகழ்கின்றன.