பக்கங்கள்

வியாழன், 6 ஜூன், 2024

மௌனராகம்

(Love in Silence) 



உன் மௌனங்களை கோர்த்து

பண்ணிசைத்தேன்

முகாரி* இராகத்தில் இசைத்தது

என் ஏக்கங்களும் தாபங்களும்


உன் இன்மையை நிறைத்து

யாழ் மீட்டினேன்

ஹரஹரப்பிரியா** இராகத்தில்

பூங்காற்று திரும்பி

சுக ராகம் சோகம் என்றது. 


உன் புறக்கணிப்பை மையிட்டு

மெட்டெழுதினேன்

சாதாரிப் பண்ணில்***

நின்னைச் சரணடைந்தது

என் கனவில்


உன் இன்ஸ்டா ஸ்டோரீஸ் எல்லாம் சேர்த்து

ரீல்ஸ் ஒன்றை ரீமிக்ஸ் செய்தேன்

இதுவரை வெளியான

எல்லா சோகப்பாடல்களையும்

மெடா பரிந்துரைக்கின்றது.


ஆரோகணமும்**** அல்காரிதமும்

மெடா உலகில் சோக இசையை

தேடிக் கண்டுபிடித்து கொட்டியது.


கடலில் முத்தெடுப்பதை போல

நான் இளையராஜாவின் பாடலை

எடுத்துக் கொண்டேன்.

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன்

ஆனால் ஒரு கவிதை எழுதக்கூட

வார்த்தையில்லாமல் அமைதியானேன்.


இன்றும் நான் உன்னைப்பற்றி

எதுவும் எழுதப் போவதில்லை 


- பாரதி ஆ.ரா


*முகாரி ராகம் - சோகத்தை வெளிப்படுத்தும் இராகம். 
** ஹரஹரப்பிரியா - பூங்காற்று திரும்புமா பாடல் இந்த ராகத்தில் பாடப்பட்டது.
***சாதாரிப்பண் - காமவர்த்தினி ராகம். பண்டைய தமிழிசை மரபில் சாதாரிப் பண். அமைதியையும் பக்தி உணர்வையும் வெளிப்படுத்தக்கூடியது.. நின்னைச் சரணனைந்தேன் என்ற பாடல் இந்த இராகம்.
****ஆரோகணம் - சப்தஸ்வரங்களின் ஏறுவரிசை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக