பக்கங்கள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

யாரினும் இனியன் பேரன்பினனே

நட்சத்திரம் 🌟 2



யாரினும் இனியன்; பேர் அன்பினனே-
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்,
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே.

- வடம வண்ணக்கன் தாமோதரன்
குறுந்தொகை 85


கருவுற்றிருக்கும் தன் பெண் குருவிக்கு, வெதுவெதுப்பான கூட்டினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு ஆண் குருவி, இனிப்பு மிக்க கரும்பின் நறுமணமில்லாத வெள்ளை மலரை கோதும். அத்தகைய ஊரினை சேர்ந்தவன் தலைவன். 

தலைவியைப் பிரிந்து onsite போன போது tinder இல் இன்னொரு இணையோடு date செய்தது தலைவிக்கு தெரிந்த பிறகு வீட்டில் மாட்டிக் கொள்கிறான். சமாதானம் செய்ய கவிஞனை/நண்பனை தூது அனுப்புகிறான். கவிஞன் தலைவியிடம் "யாரினும் இனியன், பேரன்பினன்" என்கிறான். 

இந்த உருட்டெல்லாம் போதும், அவன் சொல்லுறது ஒன்னு செய்யுறது ஒன்னா இருக்கு. எல்லாம் வெறும் வாய்ச்சொல் தான் என தலைவி மறுதலிக்கிறாள். 


கொசுறு: இந்த பாடலை எழுதியவர் வடம வண்ணக்கன் தாமோதரன். இவர் வட திசையிலிருந்து வந்த நகை வியாபாரி. வாணிபத்தில் செழித்தோங்கிய நிலம் தமிழ் நிலம். பல நாடுகளில் இருந்து இங்கு வந்து வாணிபம் செய்துள்ளனர். 


- பாரதி ஆ.ரா

விடுவுழிப் பரத்தலானே

 நட்சத்திரம் 🌟 1



ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. 

- பரணர். 
குறுந்தொகை 399


ஊர்க்கிணற்றில் படிந்திருக்கும் பாசியானது, நீர் அள்ளும் போது விலகியும், மற்ற நேரங்களில் படர்ந்தும் இருக்கின்றது. அதுபோலவே தலைவிக்கு பசலை நோயும். (பசலை என்பது காதலர் பிரிவில், தீண்டல் இல்லாமல் உடல் மெலியும் காதல் நோய்) 

தன் காதலர் தொடுகின்ற போது பசலை நோய் நீங்கியும், பிரிந்து இருக்கும் போது பாசி போல பசலை படர்ந்தும் காணப்படுகின்றது. 


காதலிலே தீண்டல் ஒரு மொழி. 

தொடுதலில் நோய் தீர்க்கும். 

தீண்டாமை ஒரு நோயாகும்.


- பாரதி ஆ.ரா 

சனி, 6 ஆகஸ்ட், 2022

நன்றே காதலர் சென்ற ஆறே

 நன்றே காதலர் சென்ற ஆறே

🏞️🌳🍀🛣️



முல்லை நிலத்திலிருந்த வந்த ஒரு நபரை இன்று காலை சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில் சந்தித்தேன். பார்ப்பதற்கு தொன்மையான ஒரு Wildlife photographer போல இருந்தார். அவரிடம் நெருங்கி பேச்சுக் கொடுத்தேன். 

நான் சங்ககாலத்தில் பிறந்து வளர்ந்தவன். மலர்கள் சொரியும் புறவின்(காடு) நாட்டு கிழான் என அறிமுகப்படுத்திக்கொண்டார். 


"மனம் நயந்த காதலியை தழுவிக் கொண்டு 

பாணனின் நயம்படு இசையின் யாத்த பயன் தெரிந்து 

இன்புற்று புணர்ச்சி நுகரும் மென்புல வைப்பின் நாட்டு கிழான் நான்"

(நடுக்காட்டில் தனிமை வந்ததே என மனசுக்கு பிடித்த காதலியோடு, பிடித்த புத்தகம், திரைப்படம், பாடல் என ஒன்றாக கேட்டு இன்புற்று நிறைய பேசி, புணர்ந்து இன்பம் கொள்ளும் மலைக் காட்டைச் சேர்ந்த தலைவன் நான்) 

"புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள 

கோட்டவும் கொடியவும் பூ பல பழுனி 

மெல் இயல் அரிவை கண்டிடும் மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே"


(பறவைகளும் மான் கூட்டங்களும், மலர் சோலைகளும் என இயற்கை மணம் கமழும் காட்டில் பிறந்தவன் நான்) 


என தன் ஊரைப் பற்றியும் காதல் வாழ்வைப் பற்றியும் படம்பிடித்தது போல பேசினார். 

அவர் எழுத்தில் இயற்கையை படம்பிடிக்கும் கானுயிர் புகைப்படக் கலைஞர் அல்லது பாணர் அல்லது கவிஞர் என புரிந்தது. அவர் பெயரைக் கேட்டேன். பேயனார் என்றார். 

அவர் ஊரைப் பற்றி அவர் சொன்னது மிக அழகாக இருந்தது. அவரது புகைப்படங்களை, படைப்புகளை பார்க்கனும்னு ஆர்வம் தொற்றிக்கொண்டது. பேச்சு கொடுத்தேன். 

அவர் ஏதோ பரபரப்பில் இருந்ததை உணர முடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு தன் தலைவியை காண சென்று கொண்டிருப்பதாக சொன்னார். 

என் எழுத்துகளை peyanaar_mullaithinai என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாருங்கள். எங்கள் கிராமத்தின் அழகும் செழுமையும் புரியும் என இயர்பாடை மாட்டிக் கொண்டார். 

"காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்

பூப்பறித்து கோர்க்க சொன்னேன்" 

"பொன்னி நதி பார்க்கனுமே" 

மண்ணே உன் மார்பில் கிடக்க

என இசையில் லயித்துக் கொண்டிருந்தார். 


என் ஊரில் என் தலைவியோடு இன்புற்று வாழ்ந்தவன். பொருள் ஈட்டுவதற்காக வேலை தேடி என் தலைவியை பிரிந்து இங்கு வந்தேன். நெடுங்காலமாகி விட்டது. கொஞ்சம் காசு சேர்த்து விட்டு என் தலைவியை பார்க்க போகிறேன். தேரை விரைந்து செலுத்த வலம்பெறுநன் தேரோட்டி யாரையும் காணவில்லை, அரசு விரைவுப் பேருந்துகள் வேறு கூட்டமாக இருக்கிறது. இப்போது எப்படி நான் சேலம் சேர்வது என கேட்டார். 

இங்கிருந்து மூன்று மணிநேரத்தில் செல்ல எண்வழிச்சாலைகள் போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றேன். 


இப்போது காலம் பொ.ஆ.பி. 3018. லகுட பாண்டிகளின் அடிமை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.


காதலியைப் பார்க்க செல்லும் பேயனாரைக் கூட்டிக் கொண்டு சேலம் சென்று கொண்டிருக்கிறேன். அவர் தலைவியைப் பிரிந்து வந்த போது தான் கடந்து வந்த காட்டுவழிப் பாதையின் அழகை புறவணிப் பத்து என தான் எடுத்த போட்டோ கவிதை ஆல்பத்தை பற்றி சொன்னார். 


நன்றே! காதலர் சென்ற ஆறே என தலைவிக்கு ஆறுதல் சொன்ன வரிகள் அவை. தலைவன் சென்ற பாதை மிக அழகானது, பாதுகாப்பானது, இயற்கை எழில் கொஞ்சம் அழகு மிக்கது, ஆதலால் தலைவியே வருந்தாதே என சொன்ன பாடல்கள்.


புறவணிப் பத்தில் அவர் காட்சி படுத்திய பத்து புகைப்படங்கள்...

(1) அழகிய மலை உச்சியில், நீலமணி போன்ற தோற்றமுடைய மயில் தோகை விரித்து நடனமாடுகின்றது.

(2) தங்க நிறத்தில் கொன்றை மலர்கள் சூழ, திருமண வீட்டில் நுழைவது போல இருமருங்கிலும் மரங்கள் சூழ வரவேற்கிறது இந்த சாலை.

(3) இந்த பச்சைப்பசேலென இருக்க, பெய்த மழை நீரை சேமிக்க கானங்கள்(நீர்நிலை) உள்ளது

(4) மழை நின்ற பிறகு சாலையில் ஒரு பெண்மான் தன் குட்டிகளோடு இன்பமாக விளையாடிக் கொண்டிருக்கிறது.

(5) அடுத்த புகைப்படங்கள் ஒரு Flora photography போல, சங்கர் படத்தில் வருவதைப்போல நெய்தல் மலர்களும், கொன்றைப் பூக்களும் பூத்துக் குலுங்கும் காட்சி, கொன்றையோடு மலர்ந்த குருந்த மரங்கள், ஆலங்கட்டி மழைபெய்து வெண்ணிறத்தில் மலர்ந்த முல்லை மலர்கள், பச்சைப்பசேலென புதரகளில் மலர்ந்த பூக்கள், மழை காலத்தில் ஏற்றப்பட்ட சுடர் போன்ற தோன்றி மலர்களும் தளவ மலர்களும் பூத்துக்குலுங்கும் காட்சி என புகைப்படங்கள் கண்களை கவருகின்றன.

(6) குருந்தம் மலர்கள் சூடிய கோவலர்களின், குளிர்ச்சி மிகுந்த குடியிருப்புகள் என அவர் வந்த வழியினை "நன்றே காதலர் சென்ற ஆறே" என பாடினார்.


ஆனால் இன்று (3018) அவர் செல்லும் சாலையோ மலைகளைக் குடைந்து, மரங்களை வேரோடு வெட்டி சாய்த்து, அந்த மலைத்தொடரில் இருந்த மயில்கள், மான்கள், பறவையினங்கள் எல்லாம் என்ன ஆயின என தெரியவில்லை. விவசாய நிலங்கள் அழிந்தன. துயரம் தாளாத விவசாயிகள் பூச்சி மருந்தினைக் குடித்தனர். ஒரு இளம் பெண் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டார். எங்களைக் கொன்றுவிடுங்கள் என குடும்பத்தோடு மண்ணெண்ணை கேனோடு முறையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து கேட்ட மூதாட்டி அரசதுரோகி என கைது செய்யப்படுகின்றார். நீதி கேட்டு நடைபயணம் மேற்கொள்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். ஏழுக்கு அடுத்து என்ன என்று கேட்டு யாராவது எட்டு என பதில் சொன்னால் அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள். இவை தான் 3018 ல் காணும் காட்சி.


இந்த எட்டு வழிச்சாலையில் கொஞ்சம் மனம் வாடியே வருகிறார். 

அவர் பேஸ்புக் ல் On this Day memoriesல அவர் எழுதிய பதிவு நோட்டிபிகேஷனில் காட்ட அப்பாடலை reshare செய்கிறார்.


07 ஆகஸ்ட் 2018 அன்று பேயனார் தன் தலைவிக்கு எழுதுகிறார்.


உன்னைக் காண வந்து கொண்டிருக்கிறேன்.

இப்போது வருகின்ற இவ்வழி நான் கடந்து வந்த முல்லைநிலப்பாதை போல இல்லை. பாலை நிலத்தின் கொடிய வழியாக உள்ளது. வளரச்சி என இவர்கள் போட்ட சாலை அழிவின் இன்பினிட்டி பாதையாக உள்ளது.


நன்றா? இக்காதலன் திரும்பும் வழி...


- பாரதி ஆ.ரா

(2018 ல் எழுதப்பட்ட பதிவு) 


செவ்வாய், 26 ஜூலை, 2022

நினைவின் இருத்தல்

 ஜூலை 26


ஒரு நாள்

ஒரு தினம்

ஒன்று போல இருப்பதில்லை

எல்லா நாளும் ஒன்றே தான், 

ஆனாலும் வேறு வேறு அனுபவங்கள். 

காலத்தினோடே நாட்களும் பயணிக்கின்றது

நிலத்தினூடே ஊர்களும் பயணிக்கின்றன

மனிதர்களுடன் நினைவுகளும் கடக்கின்றது

என்னிலிருந்து நானும் கடந்து வருகின்றேன்.


காலம் ஒரு சுமையாக

ஒன்றன்மேல் ஒன்று 

அடுக்கிக் கொண்டே செல்கிறது.

இன்றைய நாளின் சுமைகளை

புரட்டிப் பார்த்தால்

ஒரே நாள் வெவ்வேறு நிலங்களில்

உடைந்து விழுகின்றது.


இன்றைய நாளை கூகுள் படங்கள்

நினைவுச் சேகரமாக்கி காட்டுகின்றது. 

ஆன் திஸ் டே

அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்

கடந்த ஆண்டு இந்நாளில் 

இந்த புகைப்படங்களென அளாவித் திரிந்தேன்

ஒவ்வொரு நாளும் புகைப்படங்களாக 

நினைவில் மறக்கப்படுகின்றது. 

போனில் சேகரிக்கப்படுகின்றது. 


நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்நாளில்

உள்ஊர் வயலில் அந்த முள்எயிற்று ஆந்தை

ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில்பொழுதில்

என இயற்கை சூழ்ந்த ஒரு நகரில் விடியல். 

தமிழ் பால் பருகி ஆவின் பாலில் டீ குடித்து

கிராமத்து வயலில் ஆந்தை பார்த்து

நண்பர்களோடு மகிழ்ந்திருந்த அன்று,

விருப்பமற்று ஒரு விருப்பத்தில்

வீழ்ந்து எழுந்தேன்.


மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்நாளில்

கடற்கரை நகர் ஒன்றில் 

பிணங்கிக் கொண்ட ஒரு பிரிவில்

சமாதானம் செய்ய இயலாமல்

ஆகாயத்தை பார்த்து படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

இலைகள் படர்ந்த மரக்கிளைகள் கூட 

இதய வடிவில் வானை காட்டியது.

வானம் பார்த்து ஏங்கியது காதல்.

தூரத்தில் தெரிகின்ற 

தென்னை மர கீற்றுகளின் மீது 

கவிழும் சூரியனின் மஞ்சள் காட்சியை

கிளிக்கிக் கொண்டேன் படமாக. 


இரண்டாண்டுகளுக்கு முன் இந்நாளில்

லாக்டவுன் முடக்கத்தினால் 

சொந்த ஊரில் பொழுதுகள் கழிந்தன. 

மழலை மடியில் மழலையாக

மகிழ்ந்திருந்த நாட்கள். 

ஸ்நாப்சாட் பில்டர்களில் படம் எடுத்து

எங்கும் பகிராமல் 

நினைவில் சேகரித்த புகைப்படங்கள். 


ஓராண்டுக்கு முன் இந்நாளில் 

நதிக்கரையில் உள்ள ஊருக்கு

சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். 

அன்றும் அந்த நதியில்

சூரியன் வீழ்ந்துக் கொண்டிருந்தது. 

அந்தி வானம் மஞ்சள் பூசிக் கொண்டது. 


மஞ்சள் மகிழ்ச்சியின் வண்ணமா என அறியவில்லை. 

வீழ்ந்ததின் வலிகளை அழகாக்கும் 

துயர்களை வெளிச்சத்தில் இட்டு கழுவும்

ஒளி பொருந்திய வண்ணம்


இன்று இந்நாளில் 

சில்லென்ற ஒரு நகரில் 

மழைக்கால மாலையில்

தூரலை ரசித்துக் கொண்டு 

மனதில் சூரியகாந்தி மலரை எண்ணிக்கொண்டேன். 


இன்றைய இந்த நாளை 

கடந்த காலத்தின் நிலங்களில் இருந்து

திரட்டி என்னுள் ஒளித்துக் கொண்டேன். 


- பாரதி ஆ.ரா

செவ்வாய், 10 மே, 2022

அடங்க மறு 🏴

அடங்க மறுத்தலே விடுதலையின் ஆரம்பம். 




ஒழுங்கு என்பது ஆகச்சிறந்த வன்முறை. கீழ்படிதல் என்பது அடிமை சாசனம். 


அதிகாரம் என்ற அமைப்பு, கடுமையான ஒடுக்குமுறைகளின் மூலமாகத் தன்னை நிலைநாட்டிக் கொள்கிறது. அரச பீடம் தனது அதிகாரத்தினை மக்கள் மீது செலுத்த, மக்களில் இருந்தே ஆட்களை எடுத்து அவர்களை ஒடுக்குகின்றது. அவ்வாறான அமைப்பு தான் காவல் துறையும், இராணுவமும். இந்த இரு அமைப்புகளிலும் இருக்கின்ற கடுமையான ஒழுக்க நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இயல்பிலேயே அவர்களை வன்முறையாளர்களாக உருவாக்குகின்றது. 


ஒழுங்கு தனிநபர்களை உருவாக்குகின்றது; இது தனிநபர்களை அதிகாரத்தின் உறுப்பாகவும் அதன் ஏவல் செயல்பாட்டின் கருவிகளாகவும் உருவாக்குவதற்கான அதிகார அமைப்பின் ஒரு உத்தியாகும். குடிமை சமூகத்தின் மீதான நிரந்தரமான சுரண்டல் தான் இந்த ஒழுங்கு எனும் வன்முறை. 


உனக்கு மேல் உள்ளவர்களுக்கு கீழ்படிந்து நடப்பதுதான் ஒழுங்கு என்பது எவ்வளவு அயோக்கியத்தனமான சிந்தனை. 


கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்து உருவாகும் காவல்துறை, இராணுவம் போன்ற அமைப்புகளில் இருந்து வெளிவரும் ஒரு நபர், மற்ற நபர்களைவிட அதிக வன்முறையாளர்களாக உருவாக்குகின்றது. அதனால் தான் லாக்கப் மரணங்கள், பொதுமக்கள் மீதான வன்முறை போக்கு, ஒருமையில் பேசுவது, பொய் வழக்கு போட்டு சித்திரவதை என காவல்துறை வன்முறைகள் அரங்கேறுகின்றது. 

ஒழுங்கு என்பது அதிகாரம் அல்ல. ஆனால் ஒழுங்கு என்ற கட்டுப்பாட்டின் மூலம் அதிகாரம் மக்கள் மீது அதிகாரம் செயல்படுத்தப்படுகின்றது என மிகைல் பூக்கோ கூறுகிறார். 


புராண காலமானாலும் சரி, மன்னர் காலமானாலும் சரி, காலனிய தொடர்ச்சியான நவீன காலமானாலும் சரி மக்களை ஒடுக்க மக்களில் இருந்தே ஏவல் அடிமைகள் உற்பத்தி செய்யப்படுகின்றனர். 


தாத்தா காலத்திலிருந்து பேரன் காலம் வரை அதிகாரத்திற்கு அடிமை சேவகம் செய்வதற்கான அமைப்பு தான் காவல்துறை, இராணுவம், போர்ப்படைகள். 


Pollice Verso (from Latin: with a turned thumb) is an 1872 painting by French artist Jean-Léon Gérôme, featuring the eponymous Roman gesture directed to the winning gladiator.

திங்கள், 10 மே, 2021

காதல்: ஓர் முதல் உரையாடல்

 Love: First Discourse


Artist: Leonardo Dudreville

Created: 1924



காதல், குடும்பம், புனிதம், பண்பாடு என்ற கற்பிதங்களைத் தாண்டி அது காதலாக மட்டுமே இருக்கிறது.


இந்த ஓவியம் ஆறு குறுங்கதைகள் போல இருக்கின்றது. காதல் என்பதை இரு தளங்களில் வைத்து காட்சி படுத்தி கேள்விக்குள்ளாக்குகின்றது.

காதல், திருமண உறவு, திருமணம் தாண்டிய உறவு, குடும்ப பாசம், தெய்வீக காதல், வயோதிக காதல் என  பல பரிமாணங்களில் உள்ள அன்பை இந்த ஒரு ஓவியத்தில் காட்சி படுத்தியிருப்பது அழகு.


Adultery ல் ஈடுபடும் காதலர்களை காட்சிப்படுத்தும் இடத்தில் 17ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு இத்தாலிய நாடகத்தை பற்றிய குறிப்பு அருமை. அந்த நாடகமும் திருமணம் தாண்டிய ஒரு காதலை மையமிட்ட கதை தான்.


மதில் மேல் இருக்கும் பூனை, கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் புறா ஆகியவை குடும்ப அமைப்பினால் உள்ளுக்குள்ளே ஒடுக்கப்பட்ட பாலியல் விழைவை குறிப்பிடவனாகவும், cupid and psychy சிற்பம் காதலையும், மடோனா மற்றும் குழந்தையின் ஓவியம் தாயன்பையும் (mother love) குறிப்பிடுவனாக உள்ளது.


இந்த ஓவியம் பற்றி இன்னும் அதிகம் உரையாடலாம்.

சமூக பண்பாட்டு உளப்பகுப்பாய்வு மூலம் இந்த ஓவியத்தை அணுகினால் இன்றைய குடும்ப அமைப்பு, காதல் பற்றிய புரிதலும் அதில் உள்ள முரண்களையும் அறிந்து கொள்ள முடியும்.


ஒரு Anthology படத்தின் கதையை போல இந்த ஓவியம் உள்ளது.

திங்கள், 1 மார்ச், 2021

மாஸ்டர்: மேலானவற்றின் கருத்தியல்


மாஸ்டர் படத்தில் ஒரு காட்சி. அந்த படத்தின் நாயகன் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருக்கும் புகைப்படம். The essential: Zizek என உள்ளது. யார் ஜிஷெக். அந்த புத்தகம் எதைப்பற்றியது.

ஒரு உச்ச நடிகர் மூலம் ஒரு புத்தகத்தை வெகு தளத்தில் பொது மக்களிடையே அறிமுகப்படுத்தும் பாணி சமீபத்தில் திரைப்படங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் காண முடிகின்றது.

ஒரு முன்னணி நடிகரின் மூலம் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்துவது தமிழ் சமூகத்தில் நடைமுறையில் கொஞ்சம் சிக்கலானது தான். அதை முன்னணி நடிகர்கள் செய்து வருவது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் ஒரு நடிகனுக்கும் ரசிகனுக்குமான உறவில் அது தேவையற்ற ஒன்று. ஒரு நடிகன் தனது ரசிகனை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது.


"எந்த ஒரு முன்னணி நடிகரும் தன் பிறந்த நாளுக்கு இரத்ததானம் செய்யுங்கள், நற்பணி மன்றங்கள் மூலம் சமூகத் தொண்டு செய்யுங்கள் என அறிவுறுத்தலாம். ரசிகர் மன்றங்களை கலைக்கலாம். திரைப்படங்களில் அரசியல் குறித்து பஞ்ச் டயலாக் பேசலாம். பேனர், கட்அவுட், பாலபிஷேகம் செய்யாதீர்கள் என அன்புக் கட்டளைகள் இடலாம்.

ஆனால் எந்த உச்ச நட்சத்திரமும் தன் ரசிகர்களை படி என்று சொல்வதில்லை. சொன்னால் அவன் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டு அவன் வேலையை பார்க்கப் போயிடுவான்."

என ஒரு இணைய பகிர்வை படிக்க நேரிட்டது.

நடிகர் கமல் பல ஆண்டுகளாகவே நேர்காணல்களில் அவர் வாசித்த புத்தகங்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட வாரம் ஒரு புத்தகம் என அறிமுகப்படுத்திவந்தார். 

கபாலி படத்தில் ரஜினி சிறையில் My Father Name is Balayya என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பார். காலா படத்தில் தன் மேசையில் இராவண காவியம் புத்தகத்தை வைத்திருப்பார்.

எஸ். பி. ஜனநாதன், மிஷ்கின் ஆகியோர் படங்களிலும் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதை காணலாம்.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் புகைப்படத்தில் ஒன்று, அந்த படத்தின் நாயகன் விஜய் தன் கையில் The Sublime object of the Ideology எனும் புத்தகத்தை வைத்திருப்பார்.

தத்துவ உலகின் சூப்பர்ஸ்டார் என கருதப்படுகின்ற ஸ்லோவினிய அறிஞர் ஸ்லவோஜ் ஜிஷெக் அவர்கள் 1989ல் எழுதிய புத்தகம். அவர் எழுதியதில் மாஸ்டர்பீஸ் இந்நூல்.

கார்ல் மார்க்ஸ் ன் கருத்தியலையும், சிக்மண்ட் ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு நூலான கனவுகளின் விளக்கம் நூலின் சாரம்சத்தையும் இணைத்து பார்க்கின்றது இந்நூல்.

உழைப்பு - உற்பத்தி ஆகியவற்றிற்கு இடையேயான வர்க்க முரண்கள் தான் முதலாளித்துவம் என்கிறார் மார்க்ஸ். உழைப்பவனுக்கு, அவன் உற்பத்தி செய்கின்ற பொருள் என்பது அவனுக்கு சொந்தமல்ல. அவனுடைய முதலாளிக்கு சொந்தமானது. உழைத்து முடித்த பிறகு அந்த பொருளிலிருந்து உழைப்பாளி அந்நியமாகிவிடுகிறான். அது உழைப்பவனுக்கு சொந்தம் என பொதுவுடைமை தத்துவம் பேசிய கலகக்கார அறிஞர் காரல் மார்க்ஸ்.

ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கும் ஒருவன் அந்த துணியை விற்க தான் முடியும். அதிக விலையுள்ள துணியை வாங்கும் அளவுக்கு வசதி இருப்பதில்லை. இந்த வர்க்க முரண்களை கலைக்க சிந்தித்தவர் தான் மார்க்ஸ்.

கனவுகள் என்பது ஆழ்மனதின் வெளிப்பாடு என விளக்கம் கொடுத்தவர் சிக்மண்ட் ப்ராய்டு.

இந்த இரண்டு முக்கிய தத்துவங்களையும் இணைத்து விவாதித்து இருக்கிறார் இந்த நூலில்.

துணிக்கடையில் வேலை பார்க்கும் ஒருவனுக்கு விலை உயர்ந்த ஆடை எவ்வாறு அந்நியப்பட்ட ஒன்றாக ஆனது. அவன் விலை உயர்ந்த ஒரு ஆடையை அணிந்திருப்பதாக கனவு காண்பது என்பது உளவியல் சார்ந்த ஒன்று மட்டுமல்ல. அது சமூக கருத்தியலோடு தொடர்புடையது என்கிறார் ஜிஷெக்.

இந்த நூலை ஒரு முன்னணி நடிகர் தன் படத்தின் மூலம் வெகு மக்களிடையே அறிமுகப்படுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கது.

ஆனால் அந்த படத்திற்கும் இந்த புத்தகத்திற்கும் சம்மந்தமில்லை என்பது வேறு.

அனிருத் கத்த வாத்தி கம்மிங் பாட்டு சத்தமாக ஒலித்திக் கொண்டிருக்கிறது. ரசிகன் அடுத்த பட அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். 

சனி, 20 பிப்ரவரி, 2021

மகிழ்ச்சி என்பது...

மகிழ்ச்சி என்பது...

அறிவே இன்பமான வாழ்விற்கு அடிப்படை என அரிஸ்டாட்டில் சொல்கிறார். சக மனிதரை நேசிக்கின்ற, சுதந்திரமான சிந்தனையே இன்பம் தருகின்ற அறிவு. 

கொஞ்சம் விசயங்கள் தெரிந்திருத்தலே மகிழ்ச்சி என எபிக்கிரஸ் சொல்கிறார். மற்றவரைவிட கொஞ்சம் அதிகமான உண்மைகளை தெரிந்து கொண்டவர் நிம்மதியாக இருப்பதில்லை. ஆகவே எல்லாவற்றையும் அறிந்து கொள்ளாமல் கொஞ்சம் உண்மைகளை மட்டும் அறிந்து கொள்ளுங்கள் அதுவே ஆனந்தம் என்கிறார். எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டால் நிம்மதியாக இருக்க முடியாது. எல்லா கேள்விகளுக்கும் பதிலை தேடிச் சென்றால் கவலைகள் தான் மிஞ்சும். மகிழ்ச்சி என்பது குறைந்த அளவு அறிந்திருத்தல். உண்மையின் நிர்வாணம் கவலைகளைத் தரவல்லது. 

சும்மா இருப்பதே மகிழ்ச்சி என நீட்ஷே சொல்கிறார். சும்மா இருப்பது ஒன்னும் அவ்ளோ ஈசி இல்லைனு வடிவேலு சொல்கிறார். சும்மா இருக்க முடியலனாலும் சும்மா இருக்க ட்ரை பண்ணா போதும். உம்முன்னும் கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.

பயணித்துக் கொண்டிருப்பதே மகிழ்ச்சி என்கிறார் அரேபிய ஞானி இபின் ருஷ்டி.
சாலைகள் கடவுளின் உறைவிடம். கடவுளை தேடுதல், மனிதர்களோடு பயணித்தல், அவர்களிடம் கடவுளை காண்தலே இன்பம். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. எளிய மனிதர்களின் இன்பத்தில் கடவுளை கண்டடையும் வழியே அரசியலாக, தத்துவமாக முன்னிறுத்தினர். சாலை முனைகளில் கடவுள் காத்துக் கொண்டிருக்கிறார். அவரோடு ஒரு டீ அருந்தியாவாறு மகிழ்ச்சியாய் இருப்போம்.

சுதந்திரமாய் இருத்தலே மகிழ்ச்சி என்கிறார் ஜார்ஜ் ஆர்வெல். யாரையும் அடிமைப் படுத்தாமல், யாருக்கும் அடிமையாய் இல்லாமல் இருக்கும் சுதந்திர உணர்வே மகிழ்ச்சி. மனதின் சிறைகளை உடைத்து சுதந்திரமாய் இருத்தலே பெரு மகிழ்ச்சி. 

நீங்கள் இழந்த உங்கள் சுயத்தை மீண்டும் கண்டடைவதே மகிழ்ச்சி என்கிறார் மார்க்கோஸ். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் செய்யும் பிழைகளில் நம் சுயத்தை இழந்திருப்போம். தவறுகளில் இருந்து மீண்டு தன் இயல்பினை அடைதலே ஆனந்தம். நாம் இழந்த நம்மை மீட்டெடுத்தலே மகிழ்ச்சி.

மகிழ்ச்சி என்பது ஒன்றை முழுதாய் நம்புதல் என அல் பராபி சொல்கிறார். பொய், ஏமாற்றம், துரோகம் என ஐயம் கொள்ளாமல் முழுதாய் ஒன்றை நம்புவது. பலி பீடமாக இருந்தாலும் முழுவதுமாக ஒருவரை நம்பி தலையை, கொடுப்பதே பெரு மகிழ்ச்சி. கேள்விகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றை/ஒருவரை முழுதாக நம்புதலே மகிழ்ச்சி.

குடும்பத்தோடு ஒன்றாய் இருப்பதே மகிழ்ச்சி என விக்டர் ஹ்யூகோ சொல்கிறார். உறவுகளோடு இணக்கமாய் இருப்பது, புரிதலோடு இருப்பது, உறுதுணையாய் இருப்பது, நெறி தவறும் பட்சத்தில் கண்டிப்பாய் இருப்பது என உறவுகள் சூழ இருப்பது சமூகத்தில் ஒருவனை மகிழ்ச்சியாக இருக்க வைக்கின்றது.

மகிழ்ச்சி என்பது நாம் செய்கின்ற செயலை விரும்பி செய்வது என ஜேம்ஸ் பெர்ரி சொல்கிறார். இன்னது தான் பிடிக்கும், இதைத் தான் செய்வேன் என ஆசைப்பட்டு செய்வதைவிட, தான் செய்கின்ற செயலை ரசித்து விரும்பி செய்வதே மகிழ்ச்சி என்கிறார். பெரிதாக கனவுகளை வளர்த்துக் கொள்ளாமல் தனக்கு வாய்த்ததை விரும்பி ஏற்றுக்கொள்வதே மகிழ்ச்சி என்கிறார்.

மகிழ்ச்சியாய் இருப்பது என்பதே நெறியற்ற ஒன்று என ஜிஷேக் சொல்கிறார். அறத்தோடு வாழ்பவனுக்கு மகிழ்ச்சி என்பது சிறு புள்ளி தான். அதை பொருட்டாகவும் நினைப்பதில்லை. மகிழ்ச்சி என்பது அறமற்ற ஒன்று.
அறம் செய்ய பழக வேண்டும் அல்லது அறமற்றதை கொண்டாட பழக வேண்டும்.

மகிழ்ச்சி என்பது குறைந்த அளவு துயர்.

வெள்ளி, 29 ஜனவரி, 2021

காலம் பதில் சொல்லும்

காலம் பதில் சொல்லும்
என்ற கடைசி வாசகத்தோடு
அநாந்தரத்தில் விடப்பட்டேன்

காலத்தின் பதிலை 
அறிந்துகொள்ள பொறுமையில்லாமல்
காலத்தோடு மல்லுகட்டினேன்
பதில் என்ன என அறியாமல்
ஆயிரம் கேள்விகளை 
கேட்டுக் கொண்டிருந்தேன்

ஒவ்வொரு வினாக்களும்
எதிர்காலத்தின் மீது வில் தொடுத்தது
விடை தேடும் பயணம்
நிகழ் காலத்தை ரணமாக்கியது
விடையறியா வினாக்களோடு
கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டேன்

காலத்தின் புதிர் பாதையிலிருந்து
மீள்வதற்கான கடவுச்சொல் 
ஒரு பதிலாய் இருந்தது. 

அந்த பதில்
"காலம் பதில் சொல்லும்"

- பாரதி ஆரா

வியாழன், 24 டிசம்பர், 2020

காலம்

எனக்கான காலைத் தேநீர்
கடந்தகாலத்தில் இருந்து வந்தது
அதில் எதிர்காலத்தில் இருந்து
சில துளி பொய்கள் விழுந்தன.
சூடாக இருந்த தேநீர் ஆறிப்போனது

நிகழ்காலத்தின் உண்மைகள் கசக்கின்றது
சர்க்கரை கலந்த கொஞ்சம் பொய்களையாவது தா
பருகுவதற்கு

காலத்தின் மாயப்புதிர்கள் விசித்திரமானவை
நிகழ்காலத்தில் என் தேநீர் கோப்பை உடைந்து போய்விட்டது
கடந்த காலத்தின் தேநீரும்
எதிர்காலத்தின் பொய்களும்
காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன.

- பாரதி ஆ.ரா.

புதன், 25 டிசம்பர், 2019

மெசியா பிறந்தார்



உலகின் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீர்

இருந்தும் ஏன் இன்னும் பாரஞ்சுமக்கிறார்கள்? 

பாரம் சுமக்கிறேன்... நானும்... 

பொய் குற்றஞ்சாட்டப்படுகிறேன். 

கூட இருந்தே துரோகத்தின் ஈர உதடுகளால்

முத்தம் கொடுக்கப்பட்டு காட்டிக்கொடுக்கப்படுகிறேன். 

பழகியவர்களாலேயே மறுதலிக்கப்படுகிறேன். 

புறக்கணிப்பின் பாரத்தை சிலுவையாக சுமக்கிறேன். 

வெறுப்பை கிரீடமாக சூடிவிட்டு செல்கின்றனர். 

வழியெங்கும் பிரிவின் கசையடிகள். 

கரங்களில் குருதி வலிந்தோடுகின்றது. 

ஆணிகளின் காயச் சுவடுகள் இல்லை. 

நினைவின் தாகம் எடுக்கும் போதும்

போக்குகாட்டி விளையாடுகின்றனர்.

ஏன் எனக்கு இதை செய்கின்றனர்

என ஒன்றும் தெரியவில்லை. 

"என் தந்தையே! இவர்கள் இன்னதென்று அறியாமல் செய்கின்றனர். இவர்களை மன்னியும்.


சிலுவை தண்டனையா? புனிதமா?

நான் சுமந்து வந்த நேசம்

எனக்கு தண்டனையா? 

மீட்பின் வழியா? 

புரியாமலே எனக்கு நானே

இரங்கல் எழுதிக்கொண்டிருக்கிறேன். 

உயிர்த்தெழுதல் சாத்தியமா என்பது நிச்சயமில்லை.

உயிரோடிருப்பது நிச்சயம். 


நேசத்தின் தூய ஆவி வானில் நட்சத்திரமாக தெரிகிறது

மெசியா பிறந்து விட்டார்...


- பாரதி ஆ.ரா

ஞாயிறு, 10 ஜூன், 2018

பண்பாட்டுத் தொடர்பியல் அசைவுகள்

பண்பாட்டுத் தொடர்பியல் அசைவுகள்:
தொடர்பியல் தளத்தில் திருமண சடங்கு மற்றும் உணவு

அ.ஆரோக்கியராஜ்

அறிமுகம்:
பண்பாடு என்பது மக்கள் வாழ்வியலின் தொகுக்கப்பட்ட ஒரு கருத்தியல் சார் நெறிமுறை வடிவமாகும். அது மக்களின் சமய நம்பிக்கை, வழக்காற்றியல், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மொழி, வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றது. பண்பாட்டின் செயல் தன்மை என்பது ஒரு நபர்/இனக்குழு மற்றொரு நபர்/இனக்குழுவோடு தொடர்பு கொள்ளுதல், கூட்டு அடையாளங்களை உருவாக்குதல் ஆகியனவாக இருக்கின்றது. இதனை திருமண நிகழ்வினோடு ஒப்பிட்டு பார்க்கையில் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையேயான சம்மந்தம் கலத்தல், மணமக்களுக்கு கணவன் மனைவி என்ற அடையாளம், பெற்றோருக்கு சம்பந்தி என்ற அடையாளங்களை உருவாக்குகின்றது. தொடர்பியல் என்பது ஒரு செய்தியை பரிமாறிக் கொள்ளுதல், அடையாள வேறுபாடுகளை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியது. தொடர்பியலுக்கும் பண்பாட்டிற்குமான உறவு என்பது மிக நுட்பமானது. பண்பாடு தொடர்பியல் வாயிலாக உருவாக்கப்படுகின்றது. தொடர்பியல் பண்பாட்டின் உட்கூறுகள் மூலம் நடைபெறுகின்றது. ”பண்பாடு பேச்சே இல்லாத ஒரு சின்ன அசைவின் மூலம் நுட்பமாகவும், மென்மையாகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்கின்றது.” (தொ.பரமசிவன், 2016:96) அத்தகைய அசைவுகள் (சடங்குகள்) தொடர்பியல் தளத்தில் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

பண்பாட்டின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக சடங்குகள் உள்ளன. அவற்றுள் அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளும் அடங்கும். பண்பாடு என்பது தனித்து ஒரு முழுமையான தொடர்பியல் ஊடகமாக இருப்பதில்லை. பண்பாட்டுக்கும் தொடர்பியலுக்கும் இடையே ஒரு பற்றாக்குறை, போதாமை இருக்கின்றது. அதனை மிக நுட்பமாக நிறைவு செய்யும் ஒரு பற்றுக்கோளாக சடங்குகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு மொழியை ஒரு தொடர்பியல் கருவியாக கருதினால் அதனால் முழுமையான தொடர்பியலை தனித்தே நிகழ்த்த இயலாது. இரு வேறு மொழி பேசுபவர்களுக்கு இடையே எழும் சிக்கலைவிட ஒரே மொழி பேசும் குழுவினரிடையே கூட மொழியால் முழுமையாக தனித்தே இயங்க(தொடர்பு கொள்ள) முடியவில்லை. அதற்கு உருவகங்கள் போன்றவை தேவைப்படுகின்றன. தான் விரும்பும் தலைவனின் தன்மைகளை வெளிப்படுத்த மொழியால் இயலமுடியவில்லை. ‘புரட்சி புயல்’ ‘எழுச்சி சூரியன்’ போன்ற சொல்லாடல்கள் இதற்கு உதாரணம். ஒரு நடிகனை தலைவனை அவன் தன்மைகளை விளிக்க புயல், சூறாவளி, நட்சத்திரம், சூரியன், சிங்கம் போன்ற சொற்கள் தேவைப்படுகின்றன. இதனை மொழியின் குறைபாடு (Language Deficiency) என குறிப்பிடுகின்றனர். இங்கு மொழியின் செழுமையாக உருவகங்கள் இருக்கின்றன. அது போல ஒரே குமுகத்தினரிடையே கூட பண்பாடு முழுமையான தொடர்பியலை நிகழ்த்தவில்லை. இங்கு பண்பாட்டின் மேன்மை (Sublime) பொருந்திய ஒரு வடிவமாக சடங்குகள் திகழ்கின்றன. காதலர்கள் மனம் ஒத்து சேர்ந்து வாழ்ந்தாலும், அதனை சமூக அளவில் அங்கீகரிக்க திருமணம் எனும் சடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மக்கள் கருதுகின்றனர். இங்கு சமூகவயமாதலில் மிக முக்கியமானதாக சடங்குகள் உள்ளன.

ஒரு தனி மனிதன் சமூகவயமாதலில் குடும்ப அமைப்பு என்பது மிக முக்கியமானதாக திகழ்கின்றது. குடும்ப அமைப்பினை உருவாக்குவதில் மிக முக்கியமான அம்சமாகவும், தமிழக பண்பாட்டில் மிக மதிப்புமிக்க ஒரு சடங்காகவும் திருமணம் இருக்கின்றது. கீழைத்தேய சமூகத்தில் துறவு நெறிகளை போதித்த பௌத்தம், சமணம் போன்ற சமயங்களை வீழ்த்த வைதீக சமயங்கள் மிக முக்கியமான கருத்தியலாக திருமணத்தினை முன்னிறுத்தியன என்ற புரிதல் திருமணத்தை இன்னும் அதிநுட்பமாக அறிந்து கொள்ள வழிவகை செய்யும். இன்று திருமணத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, பந்தி உணவு. இந்த கட்டுரை திருமணம் குறித்த சமூக விழுமியங்களையும் அது உணவில் பிரதிபலிக்கும் தன்மைகளையும் பண்பாட்டியல் ஆய்வுப் பார்வையில் விவரிக்க முயல்கின்றது. குறிப்பாக விருத்தாசலம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வழக்கத்தில் இருக்கும் ’கடலை உடைத்துக் கல்யாணம்’ என விளிக்கப்படும் திருமணங்களில் பந்தியில் இடம்பெறும் பொட்டுக்கடலை, வேர்கடலை மிட்டாய் போன்ற பயறு வகைகள் உருவாக்கும் தொடர்பியல் அசைவுகளையும் அது குறித்த உணவு பண்பாடு மற்றும் சமூக விழுமியங்கள் ஆகியவற்றை சமயங்களின் பின்னணியில் விவரிக்கின்றது.

தமிழர் திருமணம் எனும் கருத்தியல்:
தமிழர்களின் வாழ்வியல் சடங்குகளில் மிக பிரதானமான ஒன்றாக திருமணம் இருக்கின்றது. திருமணம், கலியாணம், இணையேற்பு விழா ஆகியன மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் சொற்களாகும். கலி+ஆணம் = கல்யாணம் என்ற இந்த சொல் மக்களிடையே அதிகம் புழக்கத்தில் உள்ள சொல்லாகும். ‘கலி’ என்பது மகிழ்ச்சி, எழுச்சி, விழா, வலி என்ற பொருளையும்; ’ஆணம்’ என்பதற்கு நேயம், பற்றுக்கோடு என்று பொருள் உண்டு. (அன்பு பொன்னோவியம், 2007:368) இதனை மங்கல நாள் என குறிப்பிடுகின்றனர். “இல்லற மல்லது நல்லற மன்று” என ஔவையாரும் “அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை” என திருவள்ளுவரும் வீடுபேற்றினையும் திருமண வாழ்வின் முக்கியத்துவத்தினை குறிப்பிடுகின்றனர்.
தமிழரிடையே கொடை மணம், களவு மணம், கவர்வு மணம் ஆகிய முறைகள் இருந்தன. (தேவநேயப்பாவணர், 2000:8) தொல்காப்பியத்தில் எண்வகை திருமண முறைகளை குறிப்பிடப்படுகின்றது. வட மொழி நூல்கள் பிரம்மம், பிரஜாபத்யம், ஆர்ஷம், தைவம், கந்தர்வம், ஆசுரம், ராட்சசம், பைசாசம் ஆகிய எண்வகை திருமண முறைகள் இருந்தன என குறிப்பிடுகின்றன. (அன்பு பொன்னோவியம், 2007) திருமண மரபு பரிணமித்த வரலாற்றில் மூன்று நிலைகள் இருந்தன என தொல்காப்பியம் சுட்டுகின்றன. 1. களவு, 2. நால்வருணத்தாருக்கும் ஒரே வகைச் சடங்கு, 3. சூத்திரருக்கு மட்டும் தனி சடங்கு. இதிலிருந்து வெளிப்படும் மிக முக்கியமான விடயம் ’சடங்கு’. இங்கு சமூக அமைப்பிற்கு தனது அதிகார படிநிலைகளை தக்க வைக்கும் ஒரு உத்தியாக ஆயுதமாக சடங்குகள் உருப்பெற்றதை அறிய முடிகின்றது. சங்க இலக்கியங்களில் எந்த வித சடங்குகளும் அற்ற களவு மணமுறை இருந்ததை காண முடிகின்றது. சைவம், வைணவம் போன்ற வைதீக சமயங்கள் தமிழர்களிடையே கருத்துரு பெற ஆரம்பித்த பிறகு சடங்குகள் ஒரு புனிதத் தன்மை என்ற பெயரில் ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொண்டது. சிலப்பதிகாரத்தில் தீ வளர்த்து, பார்ப்பனர்களைக் கொண்டு வேதம் ஓதி திருமண முறை இருந்ததை அறிய முடிகின்றது. கொடுப்பது, எடுப்பது என்ற சொல்லாடல்கள் பெற்றோர் நிச்சயித்த திருமணங்களை சுட்டுகின்றன. மணமுறை என்பது ஒவ்வொரு குமுகத்தினரிடையே வேறுபட்டு காணப்படுகின்றன.

தமிழ் இலக்கியங்கள் தமிழர் வாழ்வை அகம், புறம் என வகுத்தனர். அகம் என்பது களவு, காதல் வாழ்க்கையையும், புறம் என்பது போர், பொருளீட்டல் போன்ற வீரம், உழைப்பு சார்ந்த வாழ்க்கையையும் குறிப்பிடுகின்றன. அதன் பிறகு உருவான திருக்குறள் உள்ளிட்ட நீதி இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை வலியுறுத்திக் கூறின. இதில் மக்கள் வாழ்வுக்கு தேவையான வாழ்க்கை நெறிகள் வலியுறுத்தப்பட்டன. இதில் குடும்பம், இல்வாழ்க்கை, வீடு பேறு என்பவை வாழ்வின் ஓர் அம்சமாக இருந்தன. அதன் பிறகு உருவெடுத்த பக்தி இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என குடும்ப அமைப்பின் அவசியத்தை வலியுறுத்தி வந்தன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்த மதங்கள் ஆகும். (தொ.பரமசிவன், 2016:99) சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் துறவு நெறியை போதித்தன. ஆனால் அவை மக்களிடையே செல்வாக்கு பெறவில்லை. தொல்காப்பியம் கணவனும் மனைவியும் வாழ்நாளின் இறுதிவரை சேர்ந்து வாழ்ந்து அறஞ்செய்ய வேண்டும் என குறிப்பிடுகின்றது. சமணமும் பௌத்தமும் செல்வாக்கு பெற்றிருந்தாலும் அவை போதித்த துறவு நெறி என்பது மக்களால் ஏற்கப்படாததாக இருந்தது. சமணம் பௌத்தம் போதித்த துறவு நெறிக்கு மாறாகக் குடும்பம் என்ற நிறுவனத்தினைப் பேணியது பக்தி இயக்கத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஒன்று என தொ.பரமசிவன் (2016) குறிப்பிடுகின்றார். பக்தி இயக்கங்களில் எழுச்சிக்கு பிறகு திருமணங்களில் வைதீக சடங்குகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன.

அரசு-சமூக வளர்ச்சியின் மிக முக்கியமான அம்சமாக குடும்பங்களும் திருமண நிகழ்வுகளும் இருக்கின்றன. இன்று திருமணம் என்பது சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை தொடர்ந்து ஒரு நிலைப்புத் தன்மையோடு இருக்கச் செய்யும் பண்பாட்டு ஒடுக்குக் கருவிகளாக திருமணம் மற்றும் குடும்ப அமைப்புகள் இருக்கின்றன. ”ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு” என குடும்பத்தினை ஐக்கிய நாடுகளின் அமைப்பு வரையறை செய்துள்ளது. சமூக வயமாக்கலும் (Socialization) பண்பாட்டு வயமாக்கலும் (Enculturation) குடும்பத்தில் இருந்து தான் தொடங்குகின்றன. (பக்தவச்சல பாரதி, 2007:342) ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சமூக மனிதனின் ஆதிக்கம் உறைந்து போய்க் கிடக்கின்றது. திருமணம் என்பது மனித வாழ்வினை முழுமையாக்கும் ஒரு கருத்தியல் என கருதப்படுகின்றது. இன்று பதின்ம வயதினைக் கடந்த ஒவ்வொருவருடைய பெற்றோரின் முக்கிய கடமையாக திருமணம் செய்து வைத்தல் இருக்கின்றது. பாலியல் ஒழுக்கத்தையும் தேவையையும் உறுதிபடுத்தும் ஒரு அமைப்பாக திருமணம் உள்ளது.

உணவு, சடங்கு, தொடர்பியல்:
இனக்குழு சமுதாயத்தில் சடங்கே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே சடங்காகவும் அமைந்தன. அச்சடங்குகள் இனக்குழு சமுதாயத்தை இயக்கின. இணைத்தன. அச்சமுதாயம் உருவாக்கிய மதிப்புகளை உறுதி செய்தன. (சுப்ரமணியன், கா. 2011:10) இச்சடங்குகளில் பலி இடுதல், கூடி உண்ணுதல் போன்றவை தவறாமல் இடம் பெற்றிருந்தன. சமூக ஒருங்கிணைப்புக்கு அடிப்படையாக சடங்குகள் இருக்கின்றன. மக்கள் குழுவாக இணையும் பொழுது அங்கு ஒரு முக்கியச் செயல்பாடாக உணவு அமைந்துவிடுகின்றது. இது போல திருமண நிகழ்வுகளில் பந்தி உணவு முக்கியத்துவம் பெறுகின்றது. பந்தி என்பது வரிசையில் அமர்ந்து உண்ணுதல் என்று பொருள். (ஆ. சிவசுப்ரமணியன், 2010:1) பொதுவாக எல்லா சமயத்தினரும் பந்தி உணவினை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் சாதிய மேலாண்மை, பொருளாதார வேறுபாடு என்பவை மக்களிடையே, மக்கள் மீது ஓர் அதிகார/ஆதிக்கத்தினை உண்டு பண்ணியது. இசுலாமிய வழிபாட்டில் கந்தூரி விருந்திலும் நொன்புக் கஞ்சி வழங்குவதிலும் இத்தகைய வேறுபாடுகள் களையப்படுகின்றன என ஆ. சிவசுப்ரமணியன் (2010) குறிப்பிடுகின்றார். அம்மன் கோயில் கூழ் ஊற்றும் நிகழ்வுகூட இங்கு குறிப்பிடத்தக்கது.

திருமணம் எனும் நிகழ்வானது மணப்பேச்சு, மண உறுதி, மணவிழா என மூன்று நிலைகள் இருக்கின்றன. (தேவநேயப்பாவணர், 2000:17-19) மணவிழாவின் போது பந்தல், அரசாணிக்கால், காப்பு கட்டுதல் போன்ற முன்னிகழ்ச்சிகளும், தெய்வத்தின் முன்னிலையில் தாலி கட்டிக் கொள்ளுதல் (கரணம்), வந்தோருக்கு உணவளித்து தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவை கொடுத்தல் போன்ற பின்னிகழ்ச்சிகளும் முக்கியமான சடங்குகள் ஆகும். கரணத்தோடு கூடிய திருமணத்தை வதுவை மணம் என அழைக்கப்படுகின்றது. வதுவை மணத்தில் பரிமாறப்பட்ட உணவு குறித்து அகநானூற்று பாடல் அளிக்கும் செய்தி
“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை / பெருஞ்சோற் றமலை நிற்ப …” (அகநானூறு:86)
உளுத்தம் பருப்போடு சேர்த்துச் சமைத்த கொழுமையான குழைந்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளையை உண்டல் இடையறாது நிகழ என இப்பாடல் பதிவு செய்கின்றது. அகநானூறு 136 வது பாடல் இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய நெய் மிக்க வெண்சோற்றையும் அளித்தனர் என பதிவு செய்கின்றது. இன்று அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்ப உணவு பரிமாறுகின்றனர். திருமண விருந்து அக்காலத்தில் வேளைக்கணக்காயிராது. நாட்கணக்காயிருக்கும். எளியர் ஒரு நாளும், செல்வர் ஏழுநாள் வரையும் விருந்தளிப்பர் என தேவநேயப்பாவாணர் (2000) பதிவு செய்கின்றார்.

தமிழகத்தில் பெருவாரியான சமூத்தினரிடையே ‘கடைக்குட்டிக்கு கடலைமிட்டாய் கலியாணம்’ என்ற சொல்லாடல் வழக்கில் உள்ளது. திருமணம் என்பது பெற்றோர், பெரியோர் நடத்தி வைப்பதாகவே இருக்கின்றது. பெற்றோரின் மிக முக்கியமான கடமையாக தான் பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல் என கருதுகின்றனர். அப்படி எல்லா குழந்தைகளுக்கும் திருமணம் செய்துவைத்த பிறகு கடைசிப் பிள்ளையின் திருமணத்தின் போது பெற்றோர் தங்கள் வேலையை நிறைவேற்றிவிட்ட ஒரு திருப்தி அடைகின்றனர். அத்தகைய திருமணத்தில் பந்தியில் வழக்கமாக பரிமாறப்படுகின்ற உணவு வகைகளுடன் சேர்த்து கடலை மிட்டாய் அல்லது பொட்டுக்கடலை, வெல்லம் ஆகியவை வைப்பது வழக்கம். இதனை ’கடலை உடைச்சி கலியாணம்’ என்றும் விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் குறிப்பிடுகின்றனர்.
பொட்டுக்கடலை அல்லது கடலை மிட்டாய் வைக்கப்படுவதின் காரணம், எங்கள் வீட்டில் நடைபெறும் கடைசி திருமணம் என்ற செய்தியை குறிக்கும் வகையில் இவை பரிமாறப்படுகின்றது. கொங்கு பகுதியினர் தரும் விளக்கம் என்பது, “இது கடைசி திருமணமன்று. அடுத்த இவர்கள் பிள்ளை பெற்று பேரக்குழந்தைகளின் திருமணமும் நடைபெறும். அதன் தொடர்ச்சியின் அறிவிப்பாக இவை பரிமாறப் படுகின்றன” என கூறுகின்றனர். இங்கு திருமணம் என்பது ஒரு குழுவுக்கான தொடர்பியல் தளம் என்ற அளவில் மட்டுமில்லாமல், குழுவிற்கு வெளியேயுமான தொடர்பியலை நிகழ்த்துகின்றது. அந்த தொடர்பியலை முழுமையாக்குபவையாக இத்தகைய சடங்குகள் இருக்கின்றன. அது உணவின் மூலம் மிக நுட்பமாக வெளிப்படுகின்றது.

இறுதியாக:
திருமணங்களில் பரிமாறப்படும் பந்தி உணவு தொடர்பியல் தளத்தில் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. திருமணம், குடும்பம் ஆகியவற்றின் மூலம் வைதீக மதங்கள் செல்வாக்கு பெற ஆரம்பித்து அதனூடே ஆன சடங்குகள் மூலம் தனது ஆதிக்கத்தினை மக்கள் மீது செலுத்தி வருகின்றது. இதனை எதிர்த்து பின்னாட்களில் திருமண முறைகளில் சீர்திருத்தங்கள் ஏற்பட ஆரம்பித்தன. சித்தூர் மார்க்கசகாய ஆச்சாரியார் பிராமணியத்தையும், மறைமலையடிகளும், திரு.வி.கலியாணசுந்தரனாரும் அஃதுடன் ஆரிய மொழியையும் எதிர்த்து புரட்சி செய்தனர். பெரியார் ஈ.வெ.ரா. இவற்றோடு வீண்சடங்குகளை விலக்கி, திருமணக் கரணத்தைத் (தாலி கட்டுதல்) திருத்தி புரட்சி செய்தார். தமிழர் பண்பாட்டில் இருந்து அந்நியப்பட்ட சடங்குகள் யாவும் தமிழர்களை ஒடுக்கி அதிகாரப் படிநிலைகளை உண்டு பண்ணும் ஒரு கருத்தியல் வடிவமாக இருக்கின்றது. அவ்வகையில் திருமணம் குறித்த சடங்குகள் சாதி வேறுபாடு, பெண்ணடிமை போன்ற கருத்தியல்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

திருமணங்கள் என்பது வீடுகளில், ஊர் மந்தையில் நடைபெற்றன என நாட்டார் தரவுகளில் இருந்து அறிய முடிகின்றது. மக்களுக்கான பொதுவெளி மீதான உரிமைகள் மறுக்கப்பட ஆரம்பித்த போது இங்கு திருமண மண்டபங்கள் உருவாகின. திருமண பந்தியில் பல வகையான உணவு வகைகள் இடம் பெற ஆரம்பித்தன. ஆயினும் வீட்டின் கடைசிப் பிள்ளைக்கு திருமணம் நடக்கும் போது பந்தியில் கடலை மிட்டாய், பொட்டுக்கடலை போன்ற பயிறு வகைகளை வைக்கும் சடங்கு என்பது ஆதிப் பண்பாட்டின் ஒரு தொடர்சியாகக் கருதப்படுகின்றது. இது இறப்புச் சடங்கில் அளிக்கப்படும் பயிறு வகைகளுடன் ஒரு தொடர்பு இருப்பதை அறிய முடிகின்றது. பெற்றோர் தம் வாழ்வு முழுமை (முக்தி) பெற்றதாக கருதி இதை செய்வதாக கருத இயல்கின்றது.

துணை நூற்பட்டியல்:
அன்பு பொன்னோவியம். (2007). உணவில் ஒளிந்திருக்கும் சாதி, சித்தார்த்தா பதிப்பகம்.
சிவசுப்ரமணியன், ஆ. (2010). பிள்ளையார் அரசியல்: மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள், பாவை பதிப்பகம்.
பரமசிவன், தொ. (2016) பண்பாட்டு அசைவுகள், முதல் பதிப்பு: 2001, காலச்சுவடு பதிப்பகம்.
பக்தவத்சலபாரதி, சீ. (2011) பண்பாட்டு மானிடவியல், அடையாளம் பதிப்பகம்.
மாடசாமி, ச. (2015). தமிழர் திருமணம்: அன்று முதல் இன்று வரை, எட்டாம் பதிப்பு, பாரதி புத்தகாலயம்.
தேவநேயப்பாவாணர், ஞா. (2000) தமிழர் திருமணம், பதிப்பாசிரியர்: அ. நக்கீரன், முதற்பதிப்பு:1956, தமிழ்மண் பதிப்பகம்.
சுப்ரமணியன், கா. (2011). சங்ககாலச் சமுதாயம், நியூ செஞ்சுரியன் புக் ஹவுஸ், ப.10.  



புதன், 14 பிப்ரவரி, 2018

நினைவின் வண்ணம்

நம் கோப்பைகளில் நிரம்பியுள்ள தேநீர்
என்ன வண்ணத்தில் இருக்கும்
நம்மை நனைக்கும் மழை
என்ன வண்ணமாக இருக்கும்
புன்னகைத்தவாறே
நீ அனுப்பும் ஸ்மைலிக்கள்
என்ன வண்ணத்தில்
என்னைப் பார்த்து சிரிக்கும்
உன் ஊரில்
நீ செல்லும் பாதையில்
பூக்கும் மலரின் வண்ணம் என்னவாக இருக்கும்
இங்கு என் தேநீர் கோப்பையில்
வானம் மிதந்து கொண்டிருக்கின்றது
உன் நினைவுகளும்...
நீயே சொல்
உன் நினைவின் வண்ணம்
என்னவாக இருக்கும்

பாரதி ஆரோக்கியராஜ்