பக்கங்கள்

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

தொடர்பியல் தளத்தில் உணவகம்: சமகால பண்பாட்டு அரசியலும் தொழிலாளர் முறையும்

. ஆரோக்கியராஜ்
முனைவர் பட்ட ஆய்வாளர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை


அறிமுகம்:
அனைத்தும் வணிக மயமாகிப் போன சூழ்நிலையில் பண்பாட்டுக் கூறுகளின் தன்மையும் அவற்றின் அற மதிப்பீடுகளும் ஆய்வுக்கு உட்படுத்தி பார்க்க வேண்டிய தேவை உருவாகின்றது. கோயிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சாதியினர் நுழைய அனுமதி மறுப்பதில் இருந்த எதிர்ப்பு தமிழக அரசியலில் மிக முக்கியமான செயல்பாடாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று சிறப்பு கட்டண தரிசனம் என்ற முறை எந்த வகையான ஒதுக்குதலை நிகழ்த்துகின்றது என்பது இன்றைய அரசியலை புரிந்து கொள்ள உதவும். மநு தர்மத்தின்படி ஒரு சமூகத்தினர் கோயிலுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை இன்றைய வணிக சமூகம் அதை மற்றொரு வகையில் மீள் உருவாக்கம் செய்துள்ளது. சமூகம் பல மாற்றங்களை அடைந்து வந்த போதிலும் சமூகத்தில் இருக்கின்ற அதிகார கட்டமைப்பு தன்னை தொடர்ந்து தகவமைத்துக் கொண்டே வருகின்றது. இத்தகைய சூழலில் உலகமயமாக்கல், மதம், மநுதர்மம் குறித்த விவாதங்களை இக்கட்டுரை விவாதிக்க முயல்கின்றது.
இந்திய சமூகத்தில் சாதியின் தோற்றம் என்பது தொழில் அடிப்படையில் பகுக்கப்பட்டது. அது பிறகு பிறப்பின் அடிப்படையில் மாறியது என்ற கருத்தினை வெகு மக்கள் தளத்தில் நம்ப வைக்கப்பட்டுள்ளது. இன்ன தொழில் செய்பவர் இன்ன சாதியினர்; அந்த குடும்பத்தினர் அதை தொடர வேண்டும் என்ற கருத்து பெரும்பாலான மக்களிடையே நம்ப வைக்கப்பட்டுள்ளது. தொழில் அடிப்படையில் சாதி பார்ப்பதும், சாதி ரீதியாக இன்ன தொழிலை இவர்கள் தான் செய்ய வேண்டும் என பணிப்பதும் சமூக இணக்கத்திற்கு எதிரானதாகவே அமையும். அது சமூகத்தில் அதிகாரப் படிநிலைகளை உருவாக்கி மக்களை அடிமைப்படுத்துவதற்கு வழிவகை செய்யும். நவீன சமூகமாக அடையாளப் படுத்திக் கொள்கின்ற சமூகம் உலகமயமாக்கலிலும் எவ்வாறு தனது மநுதர்ம கொள்கைகளைக் கடைபிடிக்கின்றது என்பது குறித்த புரிதல் அவசியமாகின்றது. தொழில் முறையின் மூலம் சமூகத்தில் சாதி என்ற கருத்தாக்கம் இன்றளவும் நிலைபெற்று வருகின்றது. கழிவறை சுத்தம் செய்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பணியாட்கள் என்ற பணிகள் பல அளவில் சாதியத்தை தக்க வைக்கும் ஒன்றாக இருக்கின்றது. ஆக ஒரு சமூகத்தின் தொழில் முறை என்பது அச்சமூகத்தின் அதிகார படிநிலைகளை காட்டும் ஒரு காரணியாக இருக்கின்றது.
இன்று தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து இளம் தலைமுறைகளுக்கான வேலைவாய்ப்புள்ள கல்வி என்றால் நர்சிங், டீச்சர் ட்ரெய்னிங், கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனஜ்மெண்ட் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தான். இவை பெரும்பாலும் சேவைத் துறையாகவே இருக்கின்றது. இந்த வகையான பாடப்பிரிவுகள் உண்மையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு மட்டும் அளிக்கவில்லை. அவர்கள் முன்னேற்றத்தை அவர்கள் உரிமையை பறிக்கக் கூடியதும் கூட. அந்த வகையில் இன்று மிகப் பெரிய வணிக நிறுவனமாக இருப்பது உணவகங்கள். இதன் வலைப்பின்னல் என்பது உலகமயமாக்கலோடு நேரடி தொடர்புடையது. பண்பாட்டு தளத்தில் உணவகங்களில் நடைபெறும் தொடர்பியல் அம்சங்களில் அங்குள்ள தொழிலாளர் முறையும் அவசியமானது. தொழிலாளர் முறை என்பது சமூகத்தின் கருத்தியலை பிரதிபலிக்கும் ஒன்று. இந்த தளத்தில் இருந்து கொண்டு தொடர்பியல் பற்றிய விவாதம் என்பது பன்புலப் பார்வையை விசாலப்படுத்தும். அந்த நோக்கில் இக்கட்டுரை இருக்க முயல்கின்றது.
சாதீய சமூகமும் தொழில்முறையும்:
தொழில், உழைப்பு என்பது மக்களின் சமூக வாழ்வுக்கு மிக தேவையான ஒன்றாக ஆகின்றது. தொல் பழங்குடி நிலையில் இருந்த போது வேட்டையாடுதல், காடுகளில் சுற்றித் திரிந்து தமது உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டனர். வேளாண் சமூகம், இன்றைய நவீன சமூகம் என பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இதில் சமூகத்தில் உருவான தொழில் முறையும் ஒரு முக்கியமான காரணி. மனிதன் தத்தமது உடல் சக்தி, அறிவுத்திறனுக்கு ஏற்றவாறு செய்யத் தொடங்கினர். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. எவரும் எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் என்றிருந்தது. சாதி அமைப்பு உருப்பெற தொடங்கியதும் சாதி அடிப்படையில் தொழில் முறைகள் பகுக்கப்பட்டன.
நால் வர்ண சாதிய முறையை இன்றளவும் இச்சமூகம் பின்பற்றி வருகின்றது. பார்ப்பனன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என நால்வர்ண சாதி பகுப்பு இருக்கின்றது. இந்த நால் வர்ணத்தில்  சேராதவர்கள் பஞ்சமர் என்று அழைக்கப்பட்டனர். முதல் மூன்று வர்ணத்தவருக்கு சேவை செய்யும் பொருட்டு ஏனைய சாதியினர் பணிக்கப்பட்டனர். ‘பள்ளு பறை பதினெண் குடிமக்கள்என்று வகைப்படுத்தி இவர்கள் மற்ற சாதியினருக்கு சேவை செய்ய பணிக்கப்பட்டனர். இது குறித்துஅபிதான கோசம்எனும் நூலில்ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெண் குடிகள் இருக்க வேண்டும்என்பதைக் குறிக்கின்றது. பஞ்சமர்கள், சூத்திரர்கள் ஆகியோர் மற்ற மூன்று வர்ணத்தவருக்கு பணிவிடை செய்ய வேண்டும். மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்பது மநு தர்மம் சொல்லும் நீதி.
தொழில் வேறுபாடுகளின் தன்மை குறித்து நெஸ்பீல்டு அவர்களின் கருத்து, “தூய்மை, தீட்டு ஆகிய தன்மைகளைக் குறித்து சாதி அமைப்பும் அதன் செயல்பாட்டையும் அறுதியிடும் காரணியாக தொழில்கள் உள்ளன.” என்கிறார். பெரியார் அம்பேத்கர் போன்றவர்கள் அழிக்க முற்பட்ட சாதியை இன்றைய நவீன சமூகம் உலகமயமாக்கல் என்ற பெயரில் மீட்டுருவாக்கம் செய்து வருகின்றது. தொழில் என்பது ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்கு மூளையையோ உடலையோ வருத்திச் செய்யும் செயலைக் குறிக்கும். ஒரு நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தம் இட நிலைக்கு ஏற்ப உழைப்பினில் ஈடுபடுகின்றனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என திணையைப் பொறுத்து தொழில் இருந்தது. அது சாதியாக உருப்பெற்ற போது சமூக முரண்பாடுகள் உருவாக ஆரம்பித்தது. அது இன்றளவும் தொடர்ந்து வருகின்றது. அது நம் வாழ்வின் அன்றாட செயல்பாடுகளிலும் இடம்பிடிக்கின்றது. மருத்துவமனைகளில் மருத்துவர் யார், செவிலியர் யார்; அவர்கள் எந்த பின்புலத்தில் இருந்து வருகின்றார்கள் என்பவை நாம் அன்றாடம் கவனிக்கத் தவறும் சாதீய அமைப்பின் விளைவுகள். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இவ்வாறாக தொழில் ரீதியான சாதிய அமைப்பின் தன்மைகளை அது உண்டு பண்ணியுள்ள ஏற்றத்தாழ்வுகளை பல இடங்களில் காண முடிகின்றது. அது மக்களின் உணவுப் பழக்கத்திலும் வெளிப்படுகின்றது.
உணவகங்களில் தொழில் முறைகளும் தொடர்பியல் படிநிலைகளும்:
இன்று உணவகங்கள் என்பது பண்பாட்டு பொருளாதார அமைப்பின் மிக முக்கியமான அலகாக உள்ளது. ஒரு சமூகத்தின் அசைவியக்கங்களை அறிந்து கொள்ள அவர் தம் உணவுப் பண்பாட்டை கூர்ந்து நோக்க வேண்டும். உண்மையில் பண்பாட்டாய்வு என்பது வீட்டு அடுக்களையிலிருந்து தொடங்க வேண்டும் என தமிழ் பண்பாட்டாய்வாளர் தொ. பரமசிவன் குறிப்பிடுகின்றார். வீடுகளில் சமைக்கப்படுகின்ற உணவு என்பது பெண்கள் சமைப்பதாகவே இருக்கின்றது. வீடுகளில் இருக்கும் தொழில் முறை என்பது ஆண் என்பவன் தொழில் செய்து பணம் ஈட்ட வேண்டும். பெண் என்பவள் சமைத்து, வீட்டை சுத்தம் செய்து, பராமரிக்க வேண்டும் என நியதியாக உள்ளது. இந்த முறைமையில் உள்ளது ஆண்மை என்கிற அதிகாரம். அது தான் குடும்பத்தில் ஆதிக்கத்தையும் பாலின பாகுபாட்டையும் உருவாக்கி பெண்ணடிமைத் தனத்தை உருவாக்குகின்றது.
தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் என்பது தனித்த அடையாளம். தமிழகத்தில் உணவு என்பது விற்பனைப் பண்டம் அல்ல. உணவையும் நீரையும் விற்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டது. இலையில் உணவிட்டு விருந்தினரை உபசரிப்பது தமிழர் மரபு. சாப்பிட்ட பிறகு இலையை உள் பக்கமாக மடித்தல், வெளிப்பக்கமாக மடித்தல் என்பது உணவு பரிமாறியவருக்கும் சாப்பிட்டவருக்குமான தொடர்பை பிரதிபலிக்கும் ஒன்றாக இருந்தது. சாப்பிட்ட இலையை சாப்பிட்டவரே எடுக்கக் கூடாது, விருந்து பரிமாறியவர் தான் இலையை எடுக்க வேண்டும். அப்போது தான் அந்த விருந்து முழுமையானதாக கருதப்படுகின்றது. உணவு பரிமாறுதல் இலையெடுத்தல் என்பது அவ்வீட்டு பெண்கள் தான் செய்ய வேண்டும். அதனால் தான் சமையலுக்கு மாதுகரம் என்ற பெயரிட்டு அழைக்கின்றனர். ஆனால் பெரிய விருந்துகளில் சமைப்பது ஆண்கள் தான். அதனை நளபாகம், பீமபாகம் என்றழைக்கின்றனர்.
தமிழகத்தில் உணவகங்களின் தோற்றம் என்பது நாயக்கர் ஆட்சிக்கு பிறகு உருவாக ஆரம்பித்ததாக கருதப்படுகின்றது. அது வரை இருந்த அன்னசத்திரங்கள் உணவகங்களாக மாற ஆரம்பித்தது. 1940களில் உணவகங்கள் என்பது பெண்கள் பரிமாறும் வெளியாக இருந்தது. தரையில் அமர்ந்து உண்ணும் வழக்கம் தான். பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கேயான பிரத்யேக வெளியாக இருந்தது. 1960களில் மேசை நாற்காலிகள் உணவகங்களில் இடம் பெற ஆரம்பிக்கின்றது. ஆண்கள் சப்ளையர்களாக உணவு பரிமாறினர். அந்நாட்களில் சர்வர் என்ற தொழில் ஒரு ஏழை எளிய மக்களின் தொழிலாக உருவாக ஆரம்பித்தது. சர்வர் சுந்தரம் என உள்ளிட்ட திரைப்படங்கள் இதை திரையில் பதிவு செய்துள்ளன. திராவிட இயக்க அரசியல் எழுச்சி பெற தொடங்கிய பிறகு உணவக வெளியில் சாதி ரீதியான அடையாளப் படுத்தல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவானது. இன்று நட்சத்திர உணவு விடுதிகள், இரவு நேர கொண்டாட்ட விடுதிகள், சாலையோர தள்ளு வண்டிக் கடைகள் (கையேந்தி பவன்கள்), வீட்டுக்கே வந்து உணவினை வழங்கும் இணைய சேவைகள் என தமிழர்களின் உணவு பரிமாறும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நுகர்வுப் பண்பாடு உருவாக்கியுள்ளது.
இன்று நகரம் தொடங்கி சிற்றூர் வரை எல்லா ஊர்களிலும் உணவகங்கள் என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. ஒரு ஊருக்கு கோயில், பள்ளிக்கூடம் போல தேநீர் கடைகளும் உணவகங்களும் மிக அவசியமானதாக இன்று உள்ளது. தேநீர் கடைகளும் உணவகங்களும் அந்த ஊரின் சாதி அமைப்பை பிரதிபலிக்கும் வெளியாக இருக்கின்றது. கிராமங்களில் இரட்டைக் குவளை முறை, சாதீய உணவகங்கள் என இவை வெளிப்படுகின்றன.
சிற்றூர்களில் உணவகங்களின் அமைவிடம் என்பது ஊரின் மையப்பகுதியிலோ குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் புழங்கும் வெளியிலோ தான் இருக்கின்றது. அந்த உணவகங்களை நடத்துவது பெரும்பாலும் உயர் சாதியினராகவோ இடைச் சாதியினராகவோ இருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் பெரும்பாலும் உணவகங்கள் நடத்துவது இல்லை. உணவக வெளி என்பது அதை ஊர் - சேரி என்ற பாகுபாட்டை பிரதிபலிக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. இதை உணவகங்களில் இருக்கும்சாப்பிட்டவுடன் இலையை எடுக்கவும்என்ற பலகைகளில் கூட பார்க்க முடிகின்றது. இதனை இரு வகையான வாசிப்புக்கு உள்ளாக்க முடிகின்றது. ஒன்று மனித மாண்பு, ஒருவர் சாப்பிட்ட இலையை இன்னொருவர் எடுக்காமல் அவரே எடுப்பது என்ற எண்ணம். மற்றொன்று இன்று உணவகத்தில் எல்லா சாதியினரும் சாப்பிடுகின்றனர்.இவன் சாப்பிட்ட இலையை நான் எடுப்பதா என்ற சாதித் திமிர். பெரிய பெரிய உணவகங்களில் சாப்பாடு பரிமாற ஒருவர் இலையை எடுக்க ஒருவர் என தொழிலாளர்கள் இருக்கின்றனர். இங்கு இலையை எடுப்பவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியினராகவோ வடமாநிலத் தொழிலாளராகவோ இருக்கின்றனர்.
நட்சத்திர உணவகங்களில் உணவு பரிமாறுதல் கலையாக பார்க்கப் படுகின்றது. அதற்காக பாடப்பிரிவை உருவாக்கி அதற்கென கல்லூரிகளும் ஊருக்கு ஊர் உள்ளது. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்து ஏழைக் குடும்பத்து பிள்ளைகளாகவே இருக்கின்றனர். அவர்கள் உணவு சமைத்தல், பரிமாறுதல், விடுதி அறைகளை பராமரித்தல், வாடிக்கையாளர்களிடம் முகம் சுழிக்காமல் சேவை செய்வது போன்றவை தான் அவர்கள் பாடமாக கற்கின்றனர். பார்ப்பனர், வைசியர், சத்திரியர் என்ற மூன்று வர்ணத்தவருக்கு சேவை செய்ய வேண்டும் என மநு தர்மம் எவ்வாறு சாதி ரீதியான ஒடுக்கதலை உண்டு பண்ணியதோ அதை இன்று முதலாளித்துவம் காலத்திற்கேற்ப மறு உருவாக்கம் செய்துள்ளது.
மநு தர்மத்தின் நவீன வடிவாமாக முதலாளித்துவம் உள்ளது. இவை இரண்டும் சமூகத்தின் தொழில் முறையை சாதியத்தினையும் ஆதிக்கத்தினையும் நிலைப்படுத்தும் காரணியாக கொண்டுள்ளது. இன்று உணவகம் மிகப்பெரிய பொருளாதார வலைப்பின்னலைக் கொண்டுள்ளது என்றால் அது உருவாக்கியுள்ள வேலை வாய்ப்புகள் தான். ஆனால் அவை மீண்டும் உருவாக்கியுள்ள தொழில் முறைமைகள் சாதியத்தின் மறு வடிவமே. இருந்தும் இதில் உள்ள ஒரு அம்சம் அது வாய்ப்புகளை எல்லோருக்கும் திறந்து வைத்துள்ளது. ஆனால் இன்னும் எல்லோருக்கும் கிட்டும் வண்ணம் சென்றடையவில்லை.
இறுதியாக:
வீடுகளில் உணவு சமைக்கும் போதும் பரிமாறும் போதும் அந்த வேலையை பெண்கள் தான் செய்ய வேண்டும் என பெண்ணடிமைத் தனத்தை கொண்டிருப்பதும், உணவகங்களில் இலையை எடுக்க ஒரு சாதி, சமைக்க ஒரு சாதி என சாதி அமைப்பை பின்பற்றுவதும் ஆதிக்கத்தை நிலை பெறச்செய்யும் ஒரு செயலாகும். வர்ணாசிரமக் கோட்பாடும் முதலாளித்துவமும் ஒரு அளவில் ஒரே போல செயல் படுகின்றன. இரண்டுமே தங்களுக்கு சேவை செய்ய ஒரு சமூகத்தை கட்டுப்படுத்தி வருகின்றது.
மெக்டொனால்ட், கே.எஃப்.சி போன்ற உணவுச்சாலைகளில் உணவு பரிமாறுதல் என்பது கிடையாது. அங்கு சுயசேவை வசதி தான். இந்த வகையான உணவகங்கள் பெரு முதலாளிகளுக்கான லாபம் தான் நோக்கம் என்ற போதிலும் அது சில சாதகமான மாற்றங்களை உண்டு பண்ணியுள்ளது. சுயசேவை என்பதால் தனியே தொழிலாளர்களை பரிமாறுவதற்கு கொண்டிருப்பதில்லை. இது மாதிரியான சுயசேவை உணவகங்கள் தொழிலாளர், நுகர்வோர், முதலாளி ஆகிய உறவில் ஒரு இணக்கமான சூழலை உருவாக்குகின்றதாக கருதமுடிகின்றது.

இன்று எச்சில் இலையை எடுப்பது என்பது சாதீய தொழில் அமைப்பின் ஒரு குறியீடாகத்தான் இருக்கின்றது. இதை மநு தர்மமும் முதலாளித்துவமும் சேவை என தொழில்முறையை நிலைப்படுத்தி வருகின்றது. தொடர்பியல் என்பது ஒன்றில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவது, அதன்மூலம் அதிகாரத்தை நிலைபெறச் செய்வது. உணவகங்கள் இத்தகைய அதிகாரத்தை நிலை பெறச் செய்கின்றது.

(டிசம்பர் 16-17 டிசம்பர் 2017 அன்று புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ‘ஆர்” பன்னாட்டு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

திங்கள், 11 டிசம்பர், 2017

முகவரி மாறிய கடிதம்

இன்று காலை எனது அறைக்கு ஒரு கடிதம் வந்தது. முகவரி மாறி வந்த கடிதம் அது. யாரோ மேரி என்பவருக்கு எழுதப்பட்ட கடிதம் அது. எழுதிய நபர் எதற்காக எழுதியிருப்பார். மேரிக்கு ஏதேனும் முக்கிய தகவலை எழுதியிருப்பாரோ. நல்ல செய்தியா? கெட்ட செய்தியா? என தெரியவில்லை. இந்த கடிதத்தை. எழுதியவர் என்ன சூழ்நிலையில் எழுதியிருப்பாரோ. என்ன செய்வது என பிரித்து படித்தேன். அந்த கடிதம் 99 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம்.
அந்த கடிதம்...
கொஹரசெட், மாஸ்
01 அக்டோபர் 1918
அன்புள்ள மேரிக்கு,
நான் இன்று மாலை உன்னுடன் தொலைபேசியில் பேச முயற்சி செய்தேன். நீ அங்கு இல்லை. நான் நாளை மதியம் இங்கிருந்து கிளம்புவேன். ஊர் திரும்புவதற்கு முன் உன்னை ஒரு முறை பார்க்கவும், ஓர் மாலைப் பொழுதை உன்னுடன் கழிக்க வேண்டும் என்றும் ஆசையிருந்தது. நீ நாளை மாலை அங்கிருப்பாயா? உனக்கு வேறு வேலை ஏதாவது இருக்கிறதா? நான் அங்கு வரட்டுமா? மதியம் நான் ஸ்டேஷனுக்கு வந்துவிடுவேன். அங்கிருந்து உன்னைக் கூப்பிடுகிறேன்.
God bless you
சிநேகத்துடன்
கலீல்
காலம் கடந்து முகவரி மாறி வந்த கடிதத்தை என்ன செய்வது. கலீலும் மேரியும் சந்தித்து இருப்பார்களா. இந்த கடிதம் மேரிக்கு சென்றடைந்திருக்கும் என எண்ணி கலீல் இரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பாரோ. இந்த கடிதத்தை ஸ்கேன் செய்து மேரிக்கு மெயில் பண்ணலாமா? என ஒரு யோசனை. டெலிபோன் டைரக்டரிய எடுத்து மேரி யின் வாட்ஸ்அப் நம்பர் இருக்கா என பார்த்தேன். நல்ல வேளை கிடைத்தது. கலீல் நம்பரும் கிடைத்தது. கலீலுக்கு போன் செய்தேன். நம்பர் நாட் ரீச்செபிள். மேரிக்கும் போன் செய்து பார்த்தேன். Call போகவே இல்ல. சரி லட்டர மேரிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தேன். கொஞ்ச நேரத்தில் டபுள்டிக் காட்டியது. கலீலுக்கும் அனுப்பி வைத்தேன். கொஞ்சம் நேரம் கழித்து கலீல் மொபைலில் இருந்து Call வந்தது. நான் கலீல் ஜிப்ரான் பேசுகிறேன். இந்த கடிதம் உங்களுக்கு எப்படி வந்தது. இது நான் மேரிக்கு எழுதியது.
நான் இது மாதிரி முகவரி மாறி வந்ததைக் கூறினேன்.
அந்த கடிதத்தை மேரிக்கும் அனுப்பிவிட்டேன் என்றேன்.
மகிழ்ச்சி! இன்று (டிசம்பர் 11) மேரிக்கு பிறந்தநாள். என்னுடைய வாழ்த்தையும் அவருக்கு தெரிவித்துவிடுங்கள். நான் பயணத்தில் இருக்குறேன். நீங்கள் சொல்லிவிடுங்கள் என கேட்டுக் கொண்டார்.
சரி என சொன்னேன்.
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
நான் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியையும் சேர்த்து அனுப்பினேன். கொஞ்சநேரம் கழித்து ப்ளூ டிக் காட்டியது. ரிப்ளை ஏதும் வரவில்லை. கலீலுக்கு call பண்ணி இது மாதிரி Message sent ஆகிடுச்சி. அவங்க Seen பண்ணதா Blue tick காட்டுது. ஆனா ஏதும் Reply யே இல்லனு சொன்னேன்.
பரவால்ல... நான் காதலிப்பவன். காதலை கேட்பவன் அல்ல. உங்கள் அன்புக்கு நன்றி என அழைப்பை துண்டித்தார்.
மறுபடி Call பண்ணா "நீங்கள் அழைத்த எண்ணை சரிபார்க்கவும்" என்று கம்ப்யூட்டர் வாய்ஸ் சொன்னது.
கலீல் ஜிப்ரானும் மேரியும் சேரவேயில்லை. ஆனாலும் கலீல் ஏன் மேரிய இவ்வளவு லவ் பண்றாரு.
கலீல் ஜிப்ரானின் சிநேகத்தில் இனிமை இருந்தது. அது ஒரு ஆலமரம் போல நட்பால் நடப்பட்டு அன்பால் வளர்க்கப் பட்டது. அதன் வேர்களில் ஈரமும் கிளைகளில் பறவைகளும் விழுதுகளில் குழந்தைகளும் என அன்பு சூழ்ந்த ஒன்றாக இருக்கின்றது. ரிப்ளை வருமா வராதா என்று அவர் எதிர் பார்ப்பதில்லை. உலகிலேயே பிரம்மாண்டமான காதல் அவருடையது.
இதற்கெல்லாம் அவர் வருத்தப்படப் போவதில்லை.
மேரி ஹாஸ்கலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
கலீல் இப்போதும் எந்த ரயில்வே ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருப்பார். நாளை மாலை மேரியை சந்திப்பாரா? தெரியவில்லை. அறியாத புதிரின் தேடல் தானே காதலின் உன்னதம்.
இருவரின் காதலுக்கும் பேரன்புகள். 

புதன், 1 நவம்பர், 2017

எஞ்சுபொருட்கிளவி

எஞ்சுபொருட்கிளவி

சொல்லோ பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பது எச்சம் என உரை எழுதுகிறார் இளம்பூரணர்.
எஞ்சு பொருட்கிளவி என நூற்பா சொல்கிறார் தொல்காப்பியர்.
பத்து வகையான எச்சங்கள் உண்டென வகுப்பெடுக்கிறார் தமிழாசிரியர்.
நானே சொன்னேன்
நீயோ சென்றாய்
இது பிரிநிலை எச்சம்.
காலம் மறைத்து நிற்கும் தொகைநிலைத்தொடர் வினையெச்சம்.
பிரிந்து தவித்தேன் இது கடந்தகால வினையெச்சம்
காதல் சொல்ல வந்தேன் இது நிகழ்கால வினையெச்சம்
நின் காதலை வேண்டி நின்றேன் இது எதிர்கால வினையெச்சம்
பேசாதே என கடந்தாய் இது என என் எச்சம்
எனை விட்டு விலகி நின்றாய்
புலம்பியவாறே
தலைவனை பிரிந்தாள் தலைவி
எனறேன்.
இது பெயரெச்சம் என சொன்னார் இளம்பூரணர்.
ஒழியிசை எச்சம் எதிர்மறை எச்சம் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை உன் பிரிவில்.
ஒரு கண்ணில் காதலும்
மறு கண்ணில் வெறுப்பும் தருகின்ற தலைவியை
பூவும் நெருப்பும் மொழியும் சொல்லாள் என்றேன்.
உம்மை எச்சம் என்றார் இளம்பூரணர்.
தலைவியே...
நீ வருவாய் என
நீ பேசுவாய் என
காத்திருந்தேன்.
இது என எச்சம் என வெறுப்பேற்றினார் இளம்பூரணர்.
இன்னும்
சொல் எச்சம்
குறிப்பு எச்சம்
இசை எச்சம்
என கடுப்புகளைக் கிளப்பிக் கொண்டிருந்தார் இளம்பூரணர் இலக்கண வகுப்பில்.
தொல்காப்பியரோ இளம்பூரணரோ சொல்ல மறந்து விட்டனர்.
நீ இல்லாமல் இருக்கும் நான் என்பது உயிரெச்சம் என்பதனை...
என் கண்மணியே இலக்கணம் போதும்
கொஞ்சும் இலக்கிய காதல் படிப்போம் வா

வெள்ளி, 27 அக்டோபர், 2017

பாலை நிலத்துக் காதல்

தமிழ் ஊடகங்களில் பெண்கள் மீதான சாதி மற்றும் குடும்ப அமைப்பின் பண்பாட்டு வன்முறை


.ஆரோக்கியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
arockia.raj49@gmail.com
அறிமுகம்:
மனித குல வரலாறு என்பது போர் மற்றும் காதலின் மீது எழுதப்பட்ட ஒன்று என கிரேக்கத்து ஹோமர், சீன செவ்வியல் இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், இராமாயணம் போன்ற உலகின் பல இலக்கியங்களில் இருந்து அறிய முடிகின்றது. தொல்காப்பியம் தமிழர் வாழ்வுதனை அகம் புறம் என இரு பெரும் பிரிவுகளாக பகுத்துள்ளது. உளவியல் அறிஞர்கள் மனித மனத்தினை வன்மமும் காமமும் கலந்ஒன்று என கூறுகின்றனர். மனித உணர்வுகளில் மிக மெல்லிய உணர்வாக காதலையும், முரட்டுத்தனமான பெருமைபடக்கூடிய ஒரு செயலாக வீரத்தினையும் இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழர் வாழ்வில் இவைதான் முதன்மையா? இவை இரண்டு உணர்வுகள் மட்டும் முதன்மையாக பேச என்ன காரணம்? காதல் எனும் உணர்வு எவ்வாறு சமூக அரசியல் தளத்தில் இன்று வரை ஒரு முக்கிய கருத்தியல் வடிவமாக இருந்து வருகின்றது? மனிதக் காதல் எவ்வாறு பக்திக்காதலாக மாற்றப்படுகின்றது? காதல் எனும் உணர்வு மனித வாழ்வினை ஒரு அமைப்புக்குள் எவ்வாறு கொண்டு வருகின்றது? குடும்ப அமைப்பின் உருவாக்கத்தில் கூடவே இணைத்து வருகின்ற சாதி, அரசு அதிகார ஆதிக்கத்திற்கு காதல் எவ்வாறு ஒரு அடிப்படை உணர்வாக அமைகின்றது என்பன போன்ற கேள்விகள் தமிழர் வாழ்வியலை இன்னும் மிக நுட்பமாக அறிந்து கொள்ள உதவும்.

வீரம் காதல் என்ற இரு உணர்வுகளும் ஒன்றுடன் ஒன்று இயையுடையது. இவை இரண்டும் அரசு உருவாக்கத்திற்கு மிக அடிப்படையாக விளங்குகின்றது. வீரம் எனும் உணர்வு காதலைச் சார்ந்து தான் இருக்கின்றது. ஆக அரசு-அதிகார கட்டமைப்பில் மிக முக்கியமான காரணியாக காதல் எனும் உணர்வு இருக்கின்றது. காதல் எனும் சொற்பதம்அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், பற்றார்வம், காதலணங்கு, அன்புச்செய்தி, காதல் நினைவூட்டு, காதல் தொடர்பு, காதலாட்டம், காதல் தெய்வம், மதவேள், அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பெற்றுமகிழ், நுகர்ந்து மகிழ், ஈடுபாடுகொள், நாட்டங்கொள், சார்புகொள், விரும்பிப்பயில்ஆகிய பொருட்களை தருகின்றன என அகராதி குறிப்பிடுகின்றன. (விசயகுமாரன், 2012)

சங்க இலக்கியம் தொடங்கி கவிதை, சிறுகதை, புதினம், நாவல், திரைப்படங்கள், செய்தி ஊடகங்கள், இணையம் ஆகிய அனைத்து வகையான தொடர்பியல் ஊடகங்களிலும் காதல் ஒரு பேசு பொருளாக இருக்கின்றது. அந்த காதல் மனித வாழ்வினை எந்த அளவுக்கு பிரதிபலிக்கின்றது என்ற கேள்வி மிக அவசியமானதாகின்றது. காதல் எனும் உணர்வினைப் போல அது குறித்த பிரதிபலிப்புகளும் அரசின் ஒரு பண்பாட்டு அதிகார வளையத்திற்குள்ளேயே இருந்து வருகின்றது. இன்று காதல் குறித்த வன்முறைகள் எவ்வாறு ஒரு அரசியல் செயல்பாட்டின் ஒரு வடிவமாக இருக்கின்றது. உதாரணமாக சாதி ஒழிப்பு பேசுபவர்கள் காதலின் பொருட்டு நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகளை கண்டித்தும், சாதி அமைப்புகள் காதலினை நாடகக்காதல் என்றும் கூறுகின்றனர்.

காதல், வன்முறை, ஆன்மீகம், சமயம், சாதி, நவீனம், முதலாளித்துவம் ஆகியவற்றிற்கிடையே மிக நெருக்கமான தொடர்பு உள்ளது. இதனை இன்று உள்ள திரைப்படங்கள், செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. இறைபக்தி, சாதி மறுப்புத்திருமணம், ஆணவக்கொலைகள், வணிக வளாகங்களில் கொண்டாடப்படும் காதலர்தினங்கள், இணையக்காதல்கள், காமம், கள்ளக்காதல், கொலை ஆகியனவற்றிற்கான தொடர்பு என்பது ஒரு காதலின் அரசியல் செயல்பாட்டு தொகை வடிவமாக இருக்கின்றது. இன்று ஊடகங்களில் காதல் பற்றிய செய்திகள் என்பன காதல் திருமணம் செய்தவர்கள் வெட்டிக்கொலை, காதலிக்க மறுத்த பெண் மீது வன்முறை (வெட்டிக்கொலை, அமிலம் வீசுதல், கடத்தி பலாத்காரம் செய்தல்) கள்ளக்காதல் காரணமாக கொலை என இவ்வாறாகத்தான் இருக்கின்றது.

காதல் எனும் கருத்தியல்:
காதல் என்பது இன்னொரு உயிரின் இருப்பினை ஏற்றுக்கொள்வது, நேசிப்பது. அதன்மீது ஆதிக்கம் செலுத்துவது/பணிந்து போவது. ஆக காதல் என்பது இந்த உலகில் தன்னுடைய இருப்புக்கும் இன்னொரு உயிரின் இருப்பிற்குமான விழைவே ஆகும். ”ஒரு மரத்தில் இருக்கும் கூட்டைப் போல, கூட்டில் வாழும் பறவை போல. பறவை பறக்கும் ஆகாயம்என இயற்கையின் இத்தகைய பிரம்மாண்ட காட்சிகள் ஒவ்வொன்றும் இன்னொன்றின் இருப்பினை ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்று உணர்த்துகின்றது. ஆனால் இன்று மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் பிரமாண்டம் என்பதே அதிகாரம் சார்ந்த விஷயம். சமயம், சாதி, பெருவணிகம் என்ற அதிகார மையங்கள் இன்றைய பிரமாண்டங்களை உருவாக்குகின்றது. இந்த பிரமாண்டங்கள் இன்னொரு உயிரின் இருப்பையும் வாழ்வையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. (தொ. பரமசிவன், சமயம்:16) (ரஸ்ஸல், பெர்ட்ரண்ட்) காதல் எனும் உணர்வு இன்னொரு உயிரின் இருத்தலின் பொருட்டு உருவாகும் விழைவு மட்டுமின்றி அது ஒரு அதிகார அமைப்பின் ஒரு உணர்வியல் உருவகம். அது சமூக பண்பாட்டு தளத்தில் மிக முக்கியமான அரசியல் வடிவமாக உள்ளது. ஆக காதல் என்பதை இருபாலர்களுக்கு இடையே ஏற்படும் இணக்கம், கவர்ச்சி, பற்று என்று மட்டும் புரிந்துகொள்ளாமல் அதனை அரசியல் தொகைப்பாட்டின் வடிவமாகக் கருதவேண்டும்.

காதல் கொண்டவர்களைகாதலில் விழுந்துட்டாங்கஎன கூறுவது வழக்கில் உள்ள சொல்லாடலாகும். ‘தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்எனத் தொடங்கும் திரைப்பாடல் போன்றவை கவனிக்கத்தக்கது. விழுவது என்பது தனது சுயகட்டுப்பாடு இன்றி பலவீனமடைந்து வீழ்வதாகும். ஆக காதல் என்பது அவ்வாறாகவா இருக்க வேண்டும்? காதலில் விழுந்து விடாமல், தன்னுள் இருக்கும் காதலை அறிவது எப்படி என சிந்திக்கவேண்டும் என ஜிஷெக் (2016) கூறுகின்றார். கீழைத்தேய மரபில் தன்னுள் இருக்கும் காதலை அறிதல் என்பது இறைக்காதல் என்ற நிலையில் இருக்கின்றது. ஆண்டாள் திருப்பாவை, பாரதியார் பாடல்கள் என பல தமிழ் இலக்கியங்களில் உள்ளன. தன்னுள் இருக்கும் காதலை அறிதல் என்பது இறைக்காதலாக உருமாறுகின்றது. நடைமுறையில் அந்த காதலுக்கு தடைகள் எதிர்ப்புகள் உருவானதின் காரணமாக, நீதியற்ற செயல்கள் ஆகியவை அதை இறைத்தன்மையாக மாற்றுகின்றன. மதுரைவீரன், காத்தவராயன் போன்றோர் கதைகள் இதற்கு சான்று.

இன்னொரு புறம் பெண்களை துரத்தி துரத்திக் காதலிக்கும் போக்கினை தமிழ்த்திரைப்படங்களில் தொடர்ந்து காட்சியாக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தம் என்பது போன்ற மனநிலையை பொது தளத்தில் உருவாக்கியுள்ளது. அதற்கு  இந்த சமூக அமைப்பும் ஒரு பின்புலக்காரணியாக இருக்கின்றது. பெண் என்பவள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு உடையவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இதற்கு காரணமாகின்றது. ஆனால் ஒரு பெண்என் பின்னால் வராதேஎன்று சொன்னால் கூட அதை எதிர்மறையாக புரிந்து கொண்டு அந்த பெண்ணை தொடர்ந்து பின்தொடர்வது. அதையும் மீறி அந்த பெண் அறைந்தாலோ காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தாலும்மோதல்ல தான் காதல் ஆரம்பிக்கும்’ ‘இன்னைக்கு அடிக்கிற கைதான் நாளைக்கு அணைக்கும்என்பன போன்ற மனநிலையை திரைப்படங்கள் பொதுபுத்தியில் உருவாக்கி இருக்கின்றது.

தமிழ் ஊடகங்களில் காதல், வன்முறை:
சமகாலத்திய தமிழ் ஊடகங்களில் காதல் குறித்த சித்தரிப்பு எவ்வாறாக உள்ளது என்ற புரிதலுக்கு தமிழ்சமூக வரலாற்றின் பின்புல அரசியலையும் புரிந்துகொள்வது அவசியமாகின்றது. காதல் என்பது பெண்ணின் மீது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது ஒடுக்குதலை நிலைப்படுத்தி அரசு தன்னை ஒரு அதிகார நிலையிலேயேயும், மக்களை ஒரு பதற்ற நிலையுடனும் வைத்திருக்க முயல்கின்றது. இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த செய்திகள் தினமும் ஊடகங்களில் இடம்பெற்று வருகின்றன. அதை ஊடகங்கள் எவ்வாறு செய்தியாக்குகின்றன, ஆதிக்க மனநிலை கொண்ட சமூகம் அதை எவ்வாறு உள்வாங்குகின்றது. பொதுத் தளத்தில் அது உருவாக்கி இருக்கும் கருத்து நிலை என்ன? என்பன போன்ற கேள்விகள் விவாதத்திற்கு உரியன. அதில் ஊடங்களில் கையாளப்படுகின்ற சொல்லாடல்களின் அரசியல் என்பது ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகத்தான் இருக்கின்றது.

கற்பழிப்பு என்பதனை வன்புணர்வு என்றும், கௌரவக் கொலைகளை ஆணவக் கொலை என்றும், ஒருதலைக் காதலை, துரத்தி துரத்தி காதலித்தலை (Stalking) வன்தொடர்தல் என்சொற்றொடர்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் விபச்சார அழகி, கள்ளக்காதல் போன்ற சொற்றொடர்கள் ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நிலவுடைமை சமுதாயம் உருப்பெற தொடங்கியதன் அடிப்படையாக, குடும்பம், கற்பு, பெண்ணின் புனிதம் போன்ற கருத்தாக்கங்கள் உருப்பெறத் தொடங்கின. நிலம், பெண் ஆகியன ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம், வளமை ஆகியனவாக கருதப்பட்டு அதன்மீது ஆதிக்கத்தை நிலைநாட்ட அகமண முறை காரணமாக அமைந்தது. சமூகத்தில் ஒரு ஒழுங்கை உருவாக்க முயன்றது. இன்ன சாதியினர் இன்ன சாதியினரோடு தான் உறவு கொள்ள வேண்டும் என்ஒழுங்கு. ஒழுங்கு என்பதே வன்முறை பொதிந்த ஒரு கருத்தியல் ஆகும். (கு. காரல்மார்க்ஸ், 2016) ஒரு பண்பாட்டில் எங்கு ஒழுங்கிற்கான தேவை உருவாகின்றதோ அங்கு இலக்கியங்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவான இலக்கியங்களின் தொடர்ச்சியாக இன்றைய ஊடகங்களும் திரைப்படங்களும் இருக்கின்றன.

இங்கு காதல் அரசியலின் தொகை வடித்தினை மூன்று பகுதிகளாக காணலாம்.
1. ஆண் திமிர்: ஆதிக்க எண்ணம் கொண்ட ஆண் மனநிலையும் கிட்டதட்ட இதே நிலையில் செயல்படுகின்றன. அதன் காரணமாக தன்னை பிடிக்காத பெண்ணை துரத்தி துரத்திக் காதலிப்பது, அமிலம் வீசுதல், கொலை செய்தல், கடத்தி வன்புணர்வு செய்தல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்திய சமூக மரபில் பெண் என்பவள் ஆணுக்கு அடுத்த படிநிலையில் இருப்பவள். ஆக ஒரு ஆண், ’பெண்ணை தன் விருப்பத்திற்கு ஏற்றார் போல விரும்பலாம் காதலிக்கலாம், அந்த பெண் விரும்பவில்லை என்றபோதும்என்ற மனநிலை இருக்கின்றது. காதல் என்பது சமத்துவத்தை உருவாக்க வேண்டும். மாறாக  வன்முறையை உருவாக்கக் கூடாது. ”உயிர்கள் யாவும் தம்தம் உரிமைகளையும், தேவைகளையும் பிறர் தடையின்றியும் பிறர்க்கு இடையூறு இன்றியும் பெறுவதும், ஒரு உயிர் மற்றோர் உயிர்க்கு உதவியாக வாழ்தலுமாம்என பெரியார் ஈ.வெ.ரா. (22.01.1928) கூறுகின்றார். பெரியார் கூறுவது போல அழியட்டும் ஆண்மை என்பதே சமூகநீதியையும் சுயமரியதையையும் சமூக விடுதலையையும் உருவாக்கும் வழியாகும்.

2.சாதி: குறுந்தொகைப் பாடல் கூறும் யாயும் யாயும் யாராகியரோஎன்று இருந்த காதல் சாதியப் படிநிலை உருப்பெற்ற பின்பு காதல் திருமணங்கள் செய்வது என்பது சாதிஅமைப்பிற்கு, அவமானமானதாக கருதப்பட்டு பெற்றோர்களே தம்பிள்ளைகளை கொலை செய்யும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனை சாதி அமைப்புகள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. ஜீன்ஸ் பேண்ட் போடுவதானால் தம் வீட்டு பெண்கள் மயங்கி விடுகின்றனர். கூலிங்கிலாஸ் போட்டு காதல் நாடகம் போடுகின்றனர் என்ற அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர். காதல் திருமணங்கள் நீண்ட நாட்கள் நீடிக்காது, விரைவில் பிரிந்து விடுகின்றனர். என்பன போன்ற காரணங்களை சாதி அமைப்புகள் முன்வைக்கின்றன. ’காதலிக்கலைனா பையன் வெட்டுறான், காதலிச்சா அப்பன் வெட்டுறான்என பெண்களுக்கு இரு வடிவங்களிலும் ஆபத்து இருந்து  கொண்டே இருக்கின்றது. சாதியும் மதமும் மனித குலத்திற்கு எதிரானது என்ற சிந்தனை எல்லோரிடமும் உருவாகுவது இன்றைய தேவையாகின்றது.

3. குடும்ப அமைப்பு: சாதியின் தொடர்ச்சியாக குடும்ப அமைப்பு இருந்து வருகின்றது. கணவன் எப்படிபட்டவனாய் இருந்தாலும் திருமணமான பின்பு பெண் என்பவள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவன் கூடவே வாழ்ந்தாக வேண்டும். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற சொல்லாடல் குறிப்பிடத்தக்கது. குடும்ப அமைப்பினை புனிதப்படுத்த இங்கு காதல் கள்ளம் கற்பிக்கப்படுகின்றது. ஒரு  பெண் ஒருவனை காதலிக்கிறாள். இந்த விடயம் வீட்டினருக்கு தெரியவர உடனே அவர்களின் உறவுக்கார பையனுக்கு அப்பெண்ணை உடனே திருமணம் செய்து  வைத்து விடுகின்றனர். இனி அந்தப் பெண் தனது காதலனை காதலிக்கக்  கூடாது என்ற கருத்தியலை சாதிய குடும்ப அமைப்பு உருவாக்கியுள்ளது. இந்த ஆதிக்க மனநிலையின் ஒரு வெளிப்பாடுதான் எதையும் விசாரிக்காமல் கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு என செய்திகள் வருகின்றன. அங்கு நடைபெற்ற கள்ளத் திருமணங்களையோ, குழந்தை திருமணத்தையோ ஊடகங்கள் மூடிமறைக்கின்றன. அந்த ஏழு நாட்கள், மௌனராகம், ராஜா ராணி போன்ற படங்கள் காதலைவிட குடும்ப அமைப்பு புனிதமானது என்ற ஆதிக் ககருத்தியலை உருவாக்கிய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கன.

இறுதியாக:
அன்றாடம் செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் இடம்பெறுகின்ற செய்திகளில் கணிசமான அளவு பெண்கள் மீதான வன்முறைகளாக உள்ளது. இன்று தமிழ் ஊடகங்கள் அதனை ஒரு கவர்ச்சியூட்டும் ஒரு வியாபார யுக்தியாகவும் சாதி சமய ஆதிக்க கருத்துகளை திணிப்பதாகவும் இருக்கின்றன. பாலியல் தொல்லை, ஆபாசபடம், விபச்சாரஅழகி, பலாத்காரம், உறவுக்கு இணங்க மறுத்தல் போன்ற சொல்லாடல்களை தினமலர், தினத்தந்தி உள்ளிட்ட இன்றைய தமிழ் ஊடகங்களில் காண முடிகின்றது. இந்த மாதிரியான சொல்லாடல்கள் என்ன சொல்ல வருகின்றன. அந்த செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறிப்பிடாமல் இத்தகைய கவர்ச்சிகரமான வார்த்தைகள் வாசகர்களை கவர பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு மதமும் சாதிய படிநிலைகளும் தொடந்து ஆட்சி செலுத்துகின்ற இச்சமூகத்தில் காதல் என்பதே ஒரு அரசியல் தொகை வடிவம்தான். அதனால்தான்  தெய்வீகக் காதல் என்பன போன்ற கருத்துநிலைப்பாடு இங்கு இருக்கின்றது. அந்த தெய்வீகக் காதல் செய்த ஒரு பெண்ணை சாதியை காரணம் காட்டி வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த பிறகும்கூட அந்த பெண் தன் காதலன் மீது காதல் வயப்பட்டால் அது கள்ளக்காதலாக மாற்றமடைகின்றது. இங்கு குடும்ப அமைப்பின் புனிதத்தினை காக்க காதலின் மீது களங்கம் கற்பிக்கப்படுகின்றது. குடும்ப அமைப்பு என்பது அரசின் அதிகார மையத்தின் மிக முக்கிய காரணியாக உள்ளது. இது பெண் அடிமைத் தனத்தையும் சாதியப் படிநிலைகளையும் தொடர்ந்து நிலைப்படுத்துவனாக இருக்கின்றன.

காதல் என்பது அன்பை உருவாக்காமல் குற்றங்களையும் கொலைகளையுமே இன்று உருவாக்கியுள்ளது. பாலை நிலத்தில் வறுமை ஏற்பட்டால் அங்கு குற்றங்கள் அதிகரிக்கும் என திணைக்கோட்பாடு கூறுகின்றது. இன்றைய தமிழக சூழலில் காதல் குறித்த குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இன்றைய தமிழர் மனத்தில் காதல் என்ற உணர்வு மட்டும் தனித்து பாலை நிலத்தில் இருக்கின்றது. மக்களும் மனிதமும் சவநிலையில் இருக்கின்றன.

துணைநூற்கள்:
பெரியார் (2010) அழியட்டும் ஆண்மை, பெரியார் திராவிட கழக வெளியீடு
கா. விசயரத்தினம் (2012) சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும்
கு. காரல்மார்க்ஸ் (2016) புத்தகம் பேசுது இதழ் நேர்காணல்

SlavojZizek (2016) Love as a Political Category

திங்கள், 2 அக்டோபர், 2017

காதல் பயணம்

உலகக் காதலர்களே!
இந்தியாவுக்கு இனி சுற்றுலா வந்தால் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டாம். அது ஒரு இந்(து)திய காதலின் நினைவுச் சின்னம் அல்ல.
ஏதேனும் ஒரு வீட்டின் சமையலறைக்கு செல்லுங்குள். எண்ணெய் கறை படிந்த சுவர்களைப் போல அங்கு சமைக்கின்ற பெண்ணிற்குள்ளும் சாதி காரணமாகவோ, வீட்டு கௌரவத்திற்காகவோ என மறைத்துக் கொண்ட ஒரு காதல் பிசுபிசுத்து படிந்திருக்கும்.
அந்த பிசுபிசுப்பினை உங்கள் கரங்களினால் தொட்டுப் பார்க்க வேண்டாம் என அறிவுருத்தப்படுகின்றீர்கள்.
அவள் சுடுகின்ற தோசையை சுற்றி ஊற்றப்படுகின்ற எண்ணெயைப் போல ஒரு வளையம் எப்போதும் அவளைச் சுற்றி பிண்ணப்பட்டிருக்கும். அந்த சமையலறையை கொஞ்சம் எட்டிப்பாருங்கள்.
உங்கள் அடுத்த இன்பச் சுற்றுலாவுக்கு எந்த இரயிலில் செல்ல திட்டமிட்டிருக்கிறீர்கள்.
எங்கும் நீங்கள் காதலை பார்க்கப் போவதில்லை.
வேண்டுமானால் உடனே அந்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிடுங்கள். அந்த இரயில் நிலையத்திலிருந்து கொஞ்ச தூரம் அங்குள்ள தண்டவாளத்தில் நடந்து செல்லுங்கள். கொலையுண்டுப்போன காதலின் பாடல்கள் தடக் தடக் என ஒலித்துக் கொண்டேயிருக்கும். உங்கள் மீசையை முறுக்கிக் கொண்டே அந்த ஓசையை கேட்டுப்பாருங்கள்.
எந்த ஊரின் கடைத்தெருவிற்கும் சென்று பாருங்கள். கூட்டநெரிசல் மிக்க அந்த வீதிகளில் எப்போதும் ஏதாவது காதலர்கள் கடந்து செல்வார்கள். அந்த காதலின் நினைவுகள் அங்குள்ள ஏதாவது ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சிசிடிவி கேமாராவில் பதிவாகியிருக்கும். இரத்தம் தோய்ந்த அந்த காட்சிகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இந்து இந்தியக் காதலை.
அந்த ஊரின் வெட்டவெளி மைதானத்திற்கு செல்லுங்கள். அங்கு நிர்வாணமாக்கப்பட்ட காதலர்கள் நிற்பார்கள். அவர்களை சுற்றி நின்று ஒரு கூட்டம் தாக்கிக் கொண்டிருக்கும். அதைப் பாருங்கள்.
இந்தியக் காதலை...
உங்கள் காதல் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துகள்.
இனி பிணங்கள் மிதக்கும் கங்கையில் மூழ்கி நீராடுங்கள்.
உங்கள் காதல் புனிதமடையட்டும்.
-- பாரதி ஆரோக்கியராஜ்

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

நீலத்திமிங்கலத்தின் வண்ணம்

எந்த வலையிலும் சிக்காமல்
வலைதளத்தில் உலவிக் கொண்டிருக்கும்
நீலத்திமிங்கலம்...
ஆண்பாலா பெண்பாலா
மெய்யா மெய்நிகரா
கார்ப்பரேட்களின் கூலியா
கலகம் செய்பவனா(ளா)
கற்பனையா கற்பனைகளை கட்டப்படுத்துபவனா(ளா)
அபாயகரமான இந்த நீலத்திமிங்கலம்
எந்த கடலில் இருக்கும்
உவர் நீரில் இருக்குமா
பைட்களில் இருக்குமா
அடர்ந்த வனாந்தரத்திலா
அடர்மிகு நகரிலா
அதன் கட்டளைகள் எங்கிருந்து எழுதப்படுகின்றன
நோவா பேழையிலா
குருஷேத்திரத்திலா
பள்ளி முதல் பணியிடம் வரை
உணவு முதல் ஆதார் வரை
எல்லா கட்டளைகளுக்கும்
கட்டுப்பட்டே பழக்கப்பட்ட சமூகம்
ஒரு திமிங்கலத்தின் கட்டளையை
ஏற்பதில் என்ன சங்கடம்
இந்த சமூகம் விழித்துக்கொள்ள முயல்கின்றதா
சவநிலைக்கு செல்கின்றதா
ஓட்டு போட்டுவிட்டு செல்பி எடுத்து
பேஸ்புக்கில் போட்டு முதல் கட்டளையை கடந்தவர்கள்
எத்தனை பேர் என
யாரேனும் அறிவீர்களா
செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொண்டு
செல்பி எடுத்தபோது அதன்
அடுத்த கட்டளையை நிறைவேற்றியதை
யாரேனும் உணர்ந்தீரா
இந்த உணவை உண்ணாதே
என சொன்னபிறகு
அந்த உணவை வைத்திருந்தனர் என
கொன்று குவித்த போது
இந்த விளையாட்டின் விபரீதத்தை
புரிந்து கொண்டீர்களா
நீலத்திமிங்கலம் கடற்பசுக்கென
சில விதிமுறைகளை விதித்து
கட்டுப்படுத்திய கட்டளைக்கு
எங்ஙனம் கட்டுப்பட்டீர்
என அறிவீர்களா
அது இருக்கும் கடலின் ஆழத்தில்
மூச்சுத்திணறி இறந்த
மீன் குஞ்சுகளையேனும் அறிவீர்களா
இன்னும் பல கட்டளைகள்
ஒவ்வொன்றிற்கும்
ஏன் ஒண்ணுக்கு போவதற்கும்
உன் அடையாளங்களை காட்ட வேண்டும்
இவ்வாறாக இன்னும் பல
இப்போது சொல்லுங்கள்
இந்த நீலத்திமிங்கல விளையாட்டில்
எத்தனையாவது லெவலை
கடந்துள்ளீர்கள்
உங்கள் விளையாட்டின் வண்ணம் அறிவீர்களா
பால் மணம் மாறா பிஞ்சுகளின் இரத்தம்
வெள்ளை மீது படிந்த சிவப்பு இரத்தம்
அதை புனிதமெனவும் நீங்கள் வணங்கலாம்
இந்த விளையாட்டில் இருந்து
எப்படி வெளியேறுவீர்கள்
- பாரதி ஆரோக்கியராஜ்
01.09.2017

வெள்ளி, 16 டிசம்பர், 2016

சன்னல்களற்ற அறை…

இந்த புயல் நாளில்
இருண்டு போன அறையில்
நடந்து கொண்டே இருக்கிறேன்
மேலும் கீழுமாக
பரமபத விளையாட்டினைப் போல
ஏணிகளும் பாம்புகளும்
என்னோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன.
அந்த அறையில் இருக்கும் ஒரு சன்னல் வழியாக
எனக்கான ஒளி இருக்கின்றது.
அது என்னை விட்டு விடுதலையாக்கிவிடும்…
அந்த சன்னலை தேடுகிறேன்…
ஆனால் இங்கு சில அறைகளுக்கு
சன்னல்களே இருப்பதில்லை.
இருந்தாலும் கண்டுபிடிக்க முடிவதில்லை.
யார் அறிவார்
அந்த சன்னலில் இருந்து வரும் வெளிச்சம் கூட
என்னை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்கும் என்று.
அடுத்து என்ன நடக்கும் என்பதில் தானே
வாழ்வின் அர்த்தங்கள் இருக்கின்றது.
சன்னல்களற்ற அறையில்
வாழ்வது கூட சுகம் தான்.
...
பாரதி ஆரோக்கியராஜ், தரமணி, 08.56 pm 16.12.2016

வியாழன், 10 நவம்பர், 2016

பட்டாம்பூச்சி இரயில்


தரமணியிலிருந்து புறப்பட்ட
இந்த பறக்கும் இரயில் இன்று
பட்டாம்பூச்சியாக
பறந்து கொண்டிருக்கின்றது.

தேடிக்கொண்டிருக்கின்றேன்
எனக்குள் இருக்கும் என்னை
என் அன்பை
என் காதலை
என் நட்பை…!

அந்த பட்டாப்பூச்சி
உண்மையிலேயே பைத்தியக்காரத்தனமானது.
அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கின்றது.
இரயில் பல நூற்றாண்டுகள் கடந்து
முன்னும் பின்னும் சென்று கொண்டேயிருக்கின்றது.

இந்த பிரபஞ்சம் கடந்தும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்…
என் தேடலில் ஒளிந்து கொண்டிருக்கின்றது
என் இருத்தலும்
உன் நினைவுகளும்.


பாரதி ஆரோக்கியராஜ், 10.11.2016, தரமணியில் இருந்து புறப்பட்ட இரயிலில்…

கருப்பு பணம் : மக்களின் மீதான கருத்தியல் வன்முறை

நவம்பர் 8, 2016 அன்று இந்தியப் பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி இந்த அறிவிப்பை வெளியிடுகின்றார். இன்று நள்ளிரவு முதல் மக்களிடம் புழக்கத்தில் இருக்கின்ற 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கின்றார். மேலும் இரண்டு நாட்கள் வங்கிகள், .டி.எம் மையங்கள் செயல்படாது என அறிவிக்கின்றார். ஊழல், கருப்பு பணம், தீவிரவாதம் மற்றும் கள்ள நோட்டுகளுக்கு எதிரான இந்திய அரசு எடுத்திருக்கும் வரலாற்று நடவடிக்கை என அரசு விளம்பரம் செய்து கொள்கின்றது.
இதற்கு அரசு அளித்திருக்கும் விளக்கம்:
·         இந்த வரலாற்று நடவடிக்கை மூலம் ஏழை, நடுத்தர, மேல் நடுத்தர வகுப்பினருக்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்படும்.
·         ரியல் எஸ்டேட் விலைவாசி, உயர் கல்வி, மருத்துவம் இனி சாமானிய மக்களையும் சென்றடையும்.
·         ஆயுத கடத்துபவர்கள், உளவு பார்ப்பவர்கள், தீவிர வாதிகளுக்கு நிதி உதவி அளிப்பது தடுக்கப்படும்.
·         மிகப்பெரிய அளவிலான கள்ள நோட்டுகளுக்கு முடிவு கட்டப்படும்.
என அறிவித்திருக்கின்றது.
உண்மையில் இந்த அறிவிப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் தான் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கியிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் சாமானிய மக்கள் மீது நிகழ்த்தப்படிருக்கும் பொருளாதார வன்முறை என்றே சொல்ல வேண்டும்.
திருவள்ளுவர் தீதின்றி வந்தப் பொருள் செல்வம் தான் அனைத்து இன்பத்தையும் அளிக்கும் என கூறுகின்றார். ஆனால் இன்று நாட்டின் பொருளாதரத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பது முறைகேடாக சேர்த்து வைத்துள்ள கருப்பு பணம் என இந்திய அரசால் சொல்லப்பட்டு வருகின்றது. சுவிஸ் வங்கியில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 இலட்ச ரூபாயை வங்கியில் செலுத்துவதாக வாக்குறுதி அறிவித்த இந்த அரசு இன்று செய்துள்ளது என்ன?
கருப்பு இழிவானது என்று கருதுவது அதிகாரத்திற்கும் எளிய மக்களுக்கும் இடையே நிலவிவரும் முரண்பாடு என தொ.பரமசிவன் கூறுகின்றார். அவ்வகையில் கருப்பு பணம் என்ற சொல்லாடல் முற்றிலும் சாதிய மேலாதிக்கம், இனவெறி சார்ந்த ஒன்று. ஆங்கிலத்தில் விளிக்கும் Black Money என்ற சொற்பதம் அங்கு நிலவுகின்ற நிறவெறியின் வெளிப்பாடே அன்றி வேறொன்றும் இல்லை. முறைகேடாக சேர்த்த பணத்தினை முறைகேடு என்று சொல்லாமல் கருப்பு பணம் என கூறுவது, இங்கு பொதுப்புத்தியில் இருக்கின்ற சாதீய மனப்பான்மையையே காட்டுகின்றது. இந்த சொல்லாடல் இங்கு பல்லாண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் சாதீய அதிகார மையங்கள் விளைவித்த ஒன்று. இது மக்களிடையே தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளையும், அடிமை உணர்வையும் உருவாக்குபவையாக இருக்கின்றன.
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிப்பதினால் மட்டும் நாட்டில் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைய முடியுமா. இன்று நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது முறைகேடாக சேர்த்து இருக்கும்கருப்புபணம் மட்டும் தானா. அவ்வாறு முறைகேடாக சேர்த்த பணம் வைத்திருக்கும் பெரு முதலாளிகள் இதனால் பாதிக்கப்படுவார்களா? என்றால் இல்லை என்றே சொல்லலாம். இன்று அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், பெரு வணிக நிறுவனங்கள் தான் முறைகேடாக பணம் சேர்ப்பதில் முதன்மையாக உள்ளன. அவர்களுக்கு இந்த அறிவிப்பினால் ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படப் போவதில்லை.
ஏனெனில் அவர்கள் அதை முன்பே சொத்தாகவும், வீடாகவும், நகைகளாகவும், பங்கு முதலீடுகளாகவும் மாற்றி விட்டனர். இதைவிட பெரும் அபாயம் அரசுப் பொறுப்புகளில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் பணி நியமனங்கள். முறைகேடாக பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் எவ்வித அச்சுறுத்தலும் குற்ற உணர்வுமின்றி அன்றாடம் தங்கள் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மாதாமாதம் சம்பளத்தினை முறைகேடாக வாங்கி வருகின்றனர். இது கருப்பு பணமில்லையா? ஆனால் உழைக்கும் மக்கள் ஐநூறையும், ஆயிரத்தையும் மாற்றிக்கொள்ள வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இத்தகைய பணி நியமனங்கள் செல்லாது என இவ்வாறு ஒரே இரவில் அறிவிக்க முடியுமா? பணம் செல்லாது என அறிவித்த சில மணி நேரங்களிலேயே நகைக் கடைகளை மொய்க்க தொடங்கிய கூட்டத்திடம் இருக்கின்ற முறைகேடாக சேர்க்கப்பட்ட பணங்களை இந்த அரசு எப்படி மீட்கும்.
போலியான கல்விச் சான்றிதழ்களும் முறைகேடானா பணிநியமனங்களும் தான் இன்று பல இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்றன. ஆனால் அது குறித்தோ அது சார்ந்த சாதிய படிநிலைகள் குறித்தோ வாய் திறக்காத அரசு புதிதாக வெளியிட உள்ள ரூபாய் தாளில் சமஸ்கிருதத்தை திணித்து இருக்கின்றது.
பெரு நிறுவனங்கள் வாங்கியிருக்கும் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு விவசாய கடன்களையும் கல்விக்கடன்களையும் வசூலிக்கும் வேலையை அதே நிறுவனங்களுக்கு அளித்திருப்பது துன்பியல் முரண். ஏழை நடுத்தர மக்களின் உயர்கல்வி, மருத்துவ வசதிகளை உறுதிபடுத்தும் என அறிவித்து இருக்கும் இந்த அரசு புதிய கல்விக் கொள்கை என அடுத்த தலைமுறையின் கல்வி கற்கும் உரிமையை பறிப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றது. இன்று எந்த ஒரு எளிய சாமானிய மனிதனாலும் அவ்வளவு எளிதாக அப்போலோ போன்ற மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற முடியாது. இருக்கின்ற அரசு மருத்துவமனைகளின் எதார்த்தம் முற்றிலும் வேறான ஒன்று. இதற்காக ஒரே இரவில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் அரசே ஏற்று நடத்தும். அதற்கு உரிய இழப்பீட்டினை ஐம்பது நாட்களுக்குள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை இந்த அரசு இப்படி ஒரே இரவில் அறிவித்து செயல் படுத்த முடியுமா?

அரசின் ஆதிக்கமும் அடக்கு முறையும் என்பது எளிய மக்களின் மீதே ஒழிய பெரு முதாலாளிகளிடமோ பார்ப்பனர்களிடமோ இல்லை. ஏனெனில் இன்று நிகழ்த்தப்பட்டிருப்பது எளிய மக்களின் மீதான கருத்தியல், பொருளாதார வன்முறை. இதில் எந்த நியாயங்களையும் காண முடியாது.

.ஆரோக்கியராஜ்
முனைவர் பட்ட ஆய்வாளர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்.

புதன், 26 அக்டோபர், 2016

கூட மேல கூட வச்சி கூடலூரு போறவளே

காலம் கடத்துவேனோ!

ஆண்: கூடை மேல கூடை வச்சி
மொழுந்தெடுக்கப் போற புள்ளே - உன்னைக்
கொள்வோன் மனம் குளிர
கொஞ்சம் நின்னு பேசேன்டி.
பெண்: அக்கம் பக்கம் பாராமல்
அதிகாரம் பேசும் மச்சான்
ஆனாலும் ஆகட்டும்
அடுத்த நாள் பேசிருவேன்.
ஆண்: முத்துப் போல பல்லழகி
முகங் கோணாச் சொல்லழகி - என்னைக்
கண்டாக் கசக்குதோடி
கருத்து ஒண்ணு ஆன பின்னே.
பெண்: கண்டால் கசக்காது
கருத்துள்ள அத்தானே - நான்
ஊரார் நகைக் கஞ்சி
ஓடுகிறேன் வெகுதூரம்.
ஆண்: கொள்ளை ஆசை உனக்குண்டு
கொண்டு வாரேன் பரிசப் பணம்
உன் தந்தை தட்டினாலும்
ஒரு சொல்லில் முடித்துவிடு.
பெண்: பரிசப் பணம் கொண்டு வந்தால்
பார்த்துக் கொள்வேன் அத்தானே
பாவி நான் வாடும்படி
காலத்தைக் கடத்தாதே!
ஆண்: காதலாலே வேகுறேனே
கண்ணான பெண் மயிலே
காலங் கடத்துவேனோ
காத்திருந்தும் பார்ப்பேனோ!

(எஸ். எஸ். போத்தையா அவர்களின் தொகுப்பிலிருந்து…)

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

நான் பார்த்தலின் பொருட்டு

நான் பார்த்தலின் பொருட்டு

நான் அழகை பார்த்து ரசிப்பதனால்
ஒன்றும் ஏற்படுவதில்லை
என் பார்வை அதன் அழகினால் நிறைந்தது
உடல், செவ்விதழ், வனப்பான அங்கங்கள்
கிரேக்கத்து சிலைகள் போன்ற கருங்கூந்தல்
அது அள்ளி முடியாத போதும்கூட பேரழகு
நெற்றி நுதல் படும் முடி கூட அழகு
எனது கவிதை போல அந்த முகங்கள்
எனது பால்ய இரவுகளில் இவற்றை விரும்புகிறேன்
ரகசியமாக சந்திக்க
Translated by Bharathi Arockiaraj
So much I gazed - Cavafy

So much I gazed on beauty
That my vision is replete with it
Contours of the body, Red lips, voluptuous limbs,
Hair as if taken from greek statues;
Always beautiful, even uncombed,
And it falls, slightly, over white foreheads,Faces of love, as my poetry
Wanted them…
in the nights of my youth,
In my nights, secretly, met…

சனி, 17 செப்டம்பர், 2016

காதலுக்கான அழைப்பு - பால் லாரன்ஸ் டன்பார் (1897)

Invitation to Love

Related Poem Content Details

Come when the nights are bright with stars 
Or come when the moon is mellow; 
Come when the sun his golden bars 
Drops on the hay-field yellow. 
Come in the twilight soft and gray, 
Come in the night or come in the day, 
Come, O love, whene’er you may, 
And you are welcome, welcome. 

You are sweet, O Love, dear Love, 
You are soft as the nesting dove. 
Come to my heart and bring it to rest 
As the bird flies home to its welcome nest. 

Come when my heart is full of grief 
Or when my heart is merry; 
Come with the falling of the leaf 
Or with the redd’ning cherry. 
Come when the year’s first blossom blows, 
Come when the summer gleams and glows, 
Come with the winter’s drifting snows, 
And you are welcome, welcome. 

நட்சத்திரங்கள் ஒளிரும் இரவிலோ
நிலவு காயும் பொழுதிலோ
களத்துமேட்டில் செவ்வானம் சிவக்கும் பொழுதிலோ
நீ வா, ஒரு ஒளிக் கீற்றைப் போல
...
கருக்கல் வேளையிலோ
சாமத்திலோ, பகல் பொழுதிலோ
அன்பே நீ எப்பொழுதினும் வரலாம்
நீ வரவேற்கப்படுகிறாய்
...
இனிமையான அன்பான காதலே
மென்மையான கூடடையும் புறாவே
படபடக்கும் என் நெஞ்சுக்கு அமைதியினைக் கொடு
என் இதயக்கூட்டிற்கு நீ வரவேற்கப்படுகிறாய்.
...
என் அலர் பொழுதிலும்
என் உள்ளக் களிப்பிலும்
உதிர்ந்த இலைகளோடும்
சிவந்த அத்திப் பழத்தோடும் வந்துவிடு
...
வசந்த காலத்தின் முதல் பூவாக
கோடையின் கனன்றெழும் முதல் ஒளிக்கீற்றாக
வாடையின் கதகதப்பான பனிப்பொழிவாக
வந்து விடு, நீ என்றென்றும் வரவேற்கப்படுகிறாய்
...
தமிழில்: பாரதி ஆரோக்கியராஜ்