பக்கங்கள்

வியாழன், 1 பிப்ரவரி, 2024

மெய் நிகர் காதலர்கள்

Lovers in AI Art world

Rene Magritte

The one who wants or looks for what he desires in painting, will never find what exceeds his preferences.

தான் விரும்புவதை ஓவியத்தில் தேடுபவன், அவனது வரைமீறும் எண்ணங்களை அவன் உணருவதில்லை.


Salvador dali

Have no fear of perfection, you'll never reach it.

நித்திய பரிபூரணம் என்றெண்ணி அஞ்சாதீர்கள். அதை ஒரு போதும் அடைய போவதில்லை. 


Gustav Klimt

I would rather be a superb meteor, every atom of me in magnificent glow, than a sleepy and permanant planet.

நான் ஒரு அற்புதமான நிலைத்த கிரகத்தை போல் அல்லாமல் உன்னதமான ஒரு விண் கல்லாக இருக்கவே விரும்புகிறேன்.


Vincent Van Gogh

Be clearly aware of the stars and infinity on high. Then life seems almost enchanted after all.

நட்சத்திரங்களைப் பற்றியும் முடிவில்லா பேரண்டம் பற்றியும் நன்கு அறிந்திருங்கள். அதன் பிறகு வாழ்க்கை மயக்கமடைந்ததாக தெரியும். 

வெள்ளி, 19 ஜனவரி, 2024

சதுக்கபூதம் vs Monster

Monster (2023)

Directed by Hirokazu Kore-eda

சிலப்பதிகாரத்தில் ஒரு பூதம் பற்றி சொல்லப்பட்டிருக்கும். அதன் பெயர் சதுக்கபூதம். நகரின் நான்கு சாலைகள் சந்தித்துக் கொள்ளும் இடத்தில் இந்த பூதம் இருக்கும். பொய் சொல்பவர்களையும் அறம் பிறழ்வோரையும் இப்பூதம் கொன்றுவிடும். பெண்களைப் பற்றி புறங்கூறுவோரை இப்பூதம் கழுத்தைத் திருகி கொன்றுவிடும்.

இப்படத்தின் கதை நிகழும் ஜப்பானின் ஒரு நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்படுகின்றது. அங்கிருந்து சவோரி என்ற தாயின் பார்வையிலிருந்து கதை தொடங்குகின்றது. கணவரைப் பிரிந்து தனியாக தன் மகன் மினாடோ வை வளர்த்து வருகிறார். தன்மகனின் நடவடிகையில் ஏற்படுகின்ற அசாதாரண மாற்றங்கள் பற்றி விசாரிக்கும் போது அவனது ஆசிரியர் தான் அதற்கு காரணமென பள்ளியில் முறையிட்டு அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வைக்கிறார்.

கதை மீண்டும் அந்த நகரின் சதுக்கத்தில் ஏற்படுகின்ற தீ விபத்தில் இருந்து தொடங்குகின்றது. பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஆசிரியரின் பார்வையில் இருந்து தொடங்குகின்றது. அந்த மாணவன் மினாடோ தன் சக மாணவன் யோரி யை தொந்தரவு (bullying) செய்வதாக ஆசிரியர் பார்க்கிறார். அதை பற்றி விசாரிக்கும் போது மற்றவர்களுக்கு அந்த ஆசிரியர் ஏதோ தவறு செய்தது போல தெரிந்தது. அப்பாவியான ஒரு ஆசிரியர் மீது தவறான புகாரால் அவர் வேலையை விட்டு நீக்கப்படுகிறார்.

கதை மீண்டும் அந்த நகரின் சதுக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தொடங்குகின்றது. மாணவன் மினாடோ வின் பார்வையில் இருந்து கதை விரிவடைகிறது. சக மாணவனான யோரி பெண் தன்மை கொண்ட மென்மையானவனாக இருக்கிறான். இதனா‌ல் மற்ற மாணவர்கள் அவனை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். மினாடோவிடம் அவன் நட்பாக பழகுகிறான். மற்ற மாணவர்கள் யோரியை கிண்டல் பண்ணும் போது மினாடோ காப்பாற்றும் பொருட்டு அவனிடம் இருந்து புத்தகத்தை வாங்கும் போது தான் ஆசிரியர் பார்த்து தவறாக நினைக்கிறார்.

மினாடோவும் யோரியும் தங்கள் இருவரின் நட்பை பற்றிய அறிந்து கொள்ளுதலில் பெரிய போராட்டத்தை உணருகின்றனர். அந்த போராட்டத்தில் தங்களுக்கு ஒரு மறு பிறப்பை தேட முயற்சிக்கின்றனர்.

பாழடைந்த இரயில்வே சுரங்கப்பாதையில் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட சுதந்திர வெளியை கண்டடைகின்றனர். 

நம்மால் புரிந்து கொள்ளப்படாத ஒன்றை, இன்னொன்றின் புரிதலின் அடிப்படையில் புரிந்து கொள்ள எண்ணுவதே மோசமான சிந்தனை.

மனிதர்கள் தன்னால் புரிந்து கொள்ள முடியாதவற்றை, தாங்கள் ஏற்கனவே வரையறுத்துள்ள பண்பாடு, பழக்க வழக்கம் ஆகியவற்றின் மூலம் அதை அறிய முற்படுகின்றனர். இது தான் நம்மில் இருக்கின்ற அரக்க குணம்.

வியாழன், 18 ஜனவரி, 2024

மறத் தமிழச்சிகளும் மானமுள்ள ஆண்களும்: ஏறு தழுவுதல் விளையாட்டு

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்



தமிழர் பண்பாடு என பல ஓர்மைக் கூறுகளை பொதுமைப் படுத்தி பேசி வருகின்றோம். பண்பாடு என்பது அடிப்படையில் ஒரு உயிரின் மீது இன்னொரு உயிர் வைக்கும் அன்புணர்வில் இருந்து தொடங்குகின்றது. மனித நாகரீகம் என்பது இத்தகைய மானுட நேய உணர்வின் வெளிப்பாடு.


வல்லாதிக்கம் ஒரு ஓர்மை கலாச்சாரத்தை நிறுவ முயல்கையில் மக்கள் பண்பாடு என்பது அதனதன் உட்கூறுகளுக்குள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயல்கின்றது. வல்லாதிக்க சக்திகள் மக்கள் பண்பாட்டை தன் வயப்படுதத்திக் கொள்ள முயல்கின்றன.


இன்னொரு புறம் சாதி உணர்வுடன் சல்லிக்கட்டு விளையாட்டு தொடர்புபடுத்தி பார்க்கப்படுகின்றது.


சில ஊடகங்கள் சல்லிக்கட்டில் காளை அடக்குபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றெல்லாம் செய்திகள் வெளியிடுகின்றன.


சல்லிக்கட்டு என்பது சல்லிக் காசுகளுக்காக விளையாடப்படுவது. தங்களின் வீரத்தை வெளிக்காட்டிக் கொள்ள விளையாடுகின்றனர். ஆனால் அந்த வீரம் என்கிற உணர்வு சல்லிக்காசு மதிப்பே உடையது என்றே புரிந்து கொள்ளலாம். வீரம் என்ற உணர்வு அர்த்தமற்றது. முறுக்கு மீசை, அருவா, மடிச்சி கட்டிய வேட்டி. இவையெல்லாம் வீரம் என்று கருதினால் அது சல்லிக்காசுக்கு ஈடாகாது.


ஏறு தழுவுதல் எங்கள் பண்பாடு எனும் பொழுது அதில் எல்லா சாதியினரும் இருக்க வேண்டும். அரசு வேலைக்கு இதெல்லாம் ஒரு தகுதியாக கருதினால் பெண்களுக்காகவும் சல்லிக்கட்டு நடத்தலாம்.


புலியை மறத்தால் விரட்டிய தமிழ் பெண்டிர் இங்குண்டு.


தமிழர் பண்பாட்டில் காவியை பூச நினைத்தாலும் விரட்டி அடிக்க வேண்டும்.

தமிழர் பண்பாடு என பிற்போக்கு தனங்களை போற்றாமல் அவற்றை களைந்து தமிழர் பண்பாட்டை சமத்துவமாக செழுமைப் படுத்தி வளர்வதே தமிழர் பண்பாடு.


யாதும் ஊரே யாவரும் கேளிர்


- பாரதி ஆ.ரா

சனி, 2 டிசம்பர், 2023

சிலுக்கு

Silk screen paintings




Marilyn Monroe & Vijayalakshmi aka Silk Smitha at 36 years old


ஹாலிவுட்டில் ரசிகர்களை தன் ஆளுமையான அழகால் கவர்ந்த மர்லின் மன்றோ அவர்களின் மரணத்தின் போது Pop Art கலைஞரான Andy Warhol அவரை சிறப்பிக்கும் விதமாக விதமாக silk screen painting ல் வரைந்த இந்த ஓவியம் கலை உலகில் பரவலாக வரவேற்கப்பட்டது. பளிச்சிடும் வண்ணங்கள், வெகு மக்களுக்கு பரிட்சையமான உருவங்கள், எளிதில் கவரக்கூடியது, எள்ளல் நகையுடன் என வெகு சன மக்களின் நுகர்வு ரசனையை பிரதிபலிக்கும் கலை இயக்கம். 1950களில் தொடங்கி 1970களின் காலகட்டம் வரை இந்த கலை இயக்கம் பிரசித்து பெற்று இருந்தது.


மர்லின் மன்றோ : தன் அழகால் ஹாலிவுட் திரை உலகை ஆளுமை செய்த நட்சத்திரம். வயது, எடை, உடல் அளவு போன்ற எண் அளவுகள் உங்களை அடிமைப் படுத்துபவை என்றவர். தன் 36 வயதில் மரணமடைந்தார்.


கோலிவுட்டில் தன் அழகால் தமிழ் திரையுலகில் இன்று வரை ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கும் நடிகை சில்க் ஸ்மிதா. நடிக்க வரவில்லை என்றால் நக்சலைட் ஆக ஆகியிருப்பேன் என சொன்னவர்.

திரை உலகின் சுரண்டலில் பலியான ஒரு நட்சத்திரம்.


மற்ற வீட்டு பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்க ஆசைப்படுகின்றது என்ற எண்ணத்தின் தொகுப்பான வெளிப்பாடுதான் சில்க்.


சில்க் என்றால் இன்றுவரை எல்லாரும் vibe செய்து கொண்டு 🔥 விட்டுக் கொண்டிருக்கும் Millineal, Gen Z தலைமுறையினருக்கு இன்று சில்க் ஒரு vibe material. அவ்வளவே.


எதிர்காலத்தில் எல்லாருமே 15 நிமிடங்கள் பிரபலமாக ஆகுவர் என்று 1960களில் Andy Warhol சொன்னார்.


இன்று எல்லாருமே 15ல் இருந்து 90 விநாடிகள் பிரபலமாக Instagram, YouTube ல் போராடிக் கொண்டிருக்கின்றனர்.


மன்றோவும் சில்க் ம் உறைந்து போய் இருக்கிறார்கள்.


- பாரதி ஆ.ரா

செவ்வாய், 25 ஜூலை, 2023

அகந்தை கொண்ட கதை சொல்லி

இயக்குனர் மகேந்திரன் பிறந்த தினம் 

ஜூலை 25

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தனி முத்திரை பதித்த ஒரு இயக்குனர் மகேந்திரன். இன்றைய தலைமுறையினருக்கு தெறி பட வில்லன் என அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவரது இருப்பை சாசனம் போட்டு காட்ட உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்கள் உள்ளன. 

இவர் ஏன் தமிழின் மிக முக்கியமான இயக்குனர்:

சினிமா என்பதை காட்சி ஊடகம் என்ற அளவில் சரியாக புரிந்து கொண்டு சிறந்த கலைப்படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர். 1960களில் கதை, வசனம் எழுதுபவராக தான் தன் திரையுலக வாழ்க்கையை தொடங்குகிறார். தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 1970 களின் பிற்பகுதியில் இயக்குனராக அறிமுகமாகிறார். பல படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் தனது முதல் படத்திற்கு எழுத்தாளர் உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலை தழுவி படமாக எடுக்கிறார். ரஜினி நடிகனின் மற்றொரு பரிமாணத்தை திரையில் காட்டினார்.

அடுத்த படமான உதிரிப்பூக்கள் மூலம் காட்சி மொழியில் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கினார். அந்த பனத்தின் மொத்த வசனத்தையும் இரு பக்கத்தில் எழுதிவிட முடியும். அந்த அளவுக்கு காட்சி மொழியில் சிறந்த கலைப்படத்தை உருவாக்கி அதை வெள்ளி விழா படமாக வெற்றி பெறவும் செய்தார்.

இவர் கதைகளில் மனிதனின் அக உணர்வுகளையும் அதன் குணாதிசயத்தையும் நுட்பமாக காட்சி படுத்தி இருப்பார்.

முள்ளும் மலரும் படத்தில் தான் என்ற அகங்காரம் பிடித்த ஒரு அண்ணனின் கதையை சொல்லி இருப்பார். அந்த கதையின் நாயகன் இறுதிக் காட்சியில் தான் தோற்பதைக் கூட கர்வமாக நான் உனக்கு வெற்றியைத் தருகிறேன் என்பார்.

உதிரிப்பூக்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரம் இறுதியில் தான் ஊராரால் சாவுக்கு தயாராகும் போது, "நான் பண்ண தப்புலயே மோசமான தப்பு உங்களையும் என்ன மாதிரி மாத்தினது தான்" என்று சொல்வான்.

அகந்தை கொண்ட இரு கதாபாத்திரங்களை வைத்து தமிழின் சிறந்த படங்களை அளித்திருப்பார்.

வெள்ளி, 21 அக்டோபர், 2022

செந்தூர மலரொளியில்...

இம்மாலைப் பொழுதில்

ஒரு செந்தூர மலர் மீது
இரவின் நீலம்
ஆழமாக படரத் தொடங்கியது.
மகரந்த சாலையில் உள்ள
விளக்கொளி,
வீதியில் பச்சையம் சூட்டியது.

மூப்பில்லா யாழிசை, காற்றில்
மென்மையாக வருடிச்செல்கிறது.
மஞ்சள் ஒளி பூசிய ஓர் அறையில்
என் பக்கம் தலை சாய்த்து
அவள் அருகே வந்தாள்.

அகல விரிந்த விழிகளும்
வெம்மை கொண்ட கரங்களும்
வெட்கம் நாணத்தை விரட்டியது.
இந்த அந்தி இன்னும் நீலமாக ஆனது.
தலை சாய்ந்து என் அருகே வந்தாள்.
கண்ணாடி முன் ஒன்றாய்
செல்ஃபி எடுத்துக் கொண்டோம்.
செந்தூர மலரின் ஒளியில்
இரவு நீண்டது... 

ஜேம்ஸ் ஜாய்ஸ் (1882-1941) ஐரீஷ் கவிஞர்
தமிழில்: பாரதி ஆ.ரா

The Twilight turns from Amethyst 💚
by: James Joyce (1882-1941)

The twilight turns from amethyst
To deep and deeper blue,
The lamp fills with a pale green glow
The trees of the avenue.

The old piano plays an air,
Sedate and slow and gay;
She bends upon the yellow keys,
Her head inclines this way.

Shy thoughts and grave wide eyes and hands
That wander as they list--
The twilight turns to darker blue
With lights of amethyst. 

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

பிரிவாற்றிப் பின் இருந்து வாழ்வார்

நட்சத்திரம் 10 ⭐



அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.

- திருவள்ளுவர் 

திருக்குறள் 1160


பிரிவு என்னும் கொடிய நோய் பீடித்து இருந்த போதும், அதை தாங்கிக் கொண்டு காத்திருந்து பின்னர் மீண்டும் சேர்ந்து வாழும் பலர் இங்கு இருக்கின்றனர். ஆனால் நான் இந்த பிரிவில் என்னாகுவேன் என்று தெரியவில்லையே???

கோவிட் தொற்று காலத்தில் ஏற்பட்ட பல காதல் பிரிவுகளுக்கு பின்னர் மீண்டு சில பலர் பிரிவினை தாங்கிக் கொண்டு இன்று சேர்ந்து வாழ்கின்றனர்.

கோவிட் தொற்றைவிட மோசமானது சனாதன வைரஸ். கோவிட் தொட்டால் பரவி விடக்கூடியது. சனாதனம் தொடக்கூடாது என பரப்பப்பட்ட நச்சுக் கிருமி. சமூக இடைவெளியை ஏற்படுத்தி காதலை பிரிப்பதில் கோவிட்டுக்கும் கோவிலுக்கும் சனாதனத்திற்கும் பாகுபாடு இல்லை.

குணப்படுத்துவதற்கு அரிய நோயை குணப்படுத்தி உயிர் வாழ்பவரும், தாங்க முடியாத பிரிவினைத் தாங்கிக் கொண்டு பின் பிறகு சேர்ந்து வாழும் பலர் உள்ளனர். ஆனால் நானோ???


- பாரதி ஆ.ரா

ஆசை வந்து ஆட்டுவித்த பாவம்

நட்சத்திரம் 9 🌟


நல் உரை இகந்து, புல் உரை தாஅய்,

பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிது அவாவுற்றனை நெஞ்சே! நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

- ஔவையார் (குறுந்தொகை 29)

தலைவன் தன் காதலிக்கு மெசேஜை தட்டிவிடுகிறான். இன்று இரவு வழக்கமாய் சந்திக்கும் cafeல் சந்திக்கலாமா என்று. கொஞ்சம் நேரம் கழித்து தாமதமாக பதில் வருகிறது. இந்த மாதம் முழுக்க officeல் வேலை அதிகம். அதனால late night meet பண்ணுறதுலாம் கொஞ்சம் கஷ்டம் தான். I will ping you later என சொல்லிவிட்டு offline போனாள் தலைவி. 

ஏதாவது நல்ல செய்தி கிடைக்கும்னு எதிர்பார்த்திருந்த தலைவனுக்கு இந்த செய்தி சோகமாய் ஆனது. சுடப்படாத பச்சை மண்பாத்திரத்தில் மழை பொழிந்து கரைவது போல மனம் வாடி வருந்தினான் தலைவன். Hopeless romantic ல இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. கிடைக்காதுனு தெரிஞ்சி அது மேல ஆசைப்படுற துயரம் ரொம்ப கொடுமை.

பெரிய மர உச்சியில் உள்ள தாய் மந்திக் குரங்கு தன் குட்டி மகவைத் தழுவுவது போல, என் சோகத்தை கேட்க ஒரு நபர் இருந்தால் நல்லா இருக்கும் என்று தலைவன் புலம்புகிறான்.


நான் பொலம்ப வந்து நிக்குறேன்

என் Rant அ கொஞ்சம் கேளு. 

மனம் குழம்பி வந்து நிக்குறேன்

என் Rant அ கொஞ்சம் கேளு.


ஔவையார் also deals the same chapter நண்பா.

//என் Rant அ கொஞ்சம் கேளு//

அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே


பெரும் சோகங்கள் எல்லாவற்றையும் கேட்க ஒரு காதுகள் இருந்தால் போதும். எல்லா கவலைகளும் கரைந்துவிடும்.

Onlineல் over sharing செய்து emotionally unavailable ஆகும் பெரும்பாலன தலைவன்/தலைவி களுக்கு ஆதுரமாய் எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்கும் நண்பர்கள் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.


- பாரதி ஆ.ரா

முத்த நிவாரணம் எனக்கில்லையா

நட்சத்திரம் 8 🌻💛



பிரியாத வரம் வேண்டும்

அன்பில் மடந்தை 💖🌞


அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.

குறுந்தொகை 20

✍🏼 கோப்பெருஞ்சோழன்


பிரிஞ்சி போனா வருத்தப்படுவாங்கலேனு கொஞ்சம்கூட யோசிக்காம தன்னுடைய துணையைப் பிரிந்து பணி நிமித்தமாக பிரிந்து செல்பவர் திடமான அறிவுடையவர் அப்படீனு சொல்லிக்கிறாங்க. இருந்துட்டு போகட்டும். அந்த பிரிவைத் தாங்க முடியாமல் வருத்தப்படும் நான் பைத்தியமாகவே இருந்து கொள்கிறேன் என சங்க காலத்தில் ஒருவர் புலம்புகிறார்.

இந்த பாடலை எழுதியவர் கோப்பெருஞ்சோழன். சோழ மன்னன் எழுதிய பாடல் இது.

//காதல் பஞ்சம் வந்து நொந்தேனே

முத்த நிவாரணம் எனக்கில்லையா//

என வைரமுத்து ஒரு பிரிவின் தாபத்தை எழுதுகிறார். 

பிரியமும் பிரிவும் தவிர்க்க இயலாதது. ஆனால் அதை தாங்கிக்கொள்ளத்தான் பலரால் முடிவதில்லை.

உரவோர் - வலிமையான அறிவுடையவர்

மடந்தை - அறியாமையில் இருப்பவர்.

அன்பில் மடந்தையாக இருப்பதும் தவறில்லை. 


- பாரதி ஆ.ரா

நீத்தல் ஓம்புமதி

நட்சத்திரம் 7 🌻💛



அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி பூக் கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.

- நற்றிணை 10


காதல் என்பது நெடும்பயணத்தின் வழித்துணை போன்றது. அது தோன்றுவதற்கு அற்பமான காரணங்கள் இருந்தாலும் தொடர்வதற்கு புரிதலும் மரியாதையும் தான் தேவைப்படுகின்றது. தன் இணையிடம் சொல்லுகின்ற உறுதியளிக்கும் வார்த்தைகளும் அந்த சொல்லை காப்பாற்றும் செயலும் முக்கியமானது.

காதல் தோன்றுவதற்கான அற்ப காரணங்களில் ஒன்று, உடல் அழகின் மீதான ஈர்ப்பு.

காதல் இந்த உடலின் அழகை வைத்து தான் வருகிறதென்றால் இந்த அழகு ஒரு நாள் அழிந்து போய்விடும். அப்போது இந்த காதல் என்னவாகும் என்ற பயம் எல்லா காலத்திலும் இருக்கின்றது.

தன் காதலியுடன் Dating சென்ற தலைவனைப் பார்த்து, தலைவியின் தோழி தலைவனிடம் சில அறிவுரைகள் கொடுக்கிறார்.

இவளது மேனி அழகு ஒரு நாள், வடிவிழந்து போகலாம். கூந்தல் நரைத்து, சருமம் சுருங்கி வயதான காலத்திலும் இவளை விட்டு நீங்கும் எண்ணம் கொல்லாதே. அவளுடன் காலம் முழுதும் இருப்பேன் என்று சொன்ன வார்த்தையை காலம் முழுக்க காப்பாற்று என்கிறாள். அந்த தோழி என்பது காதல் நெறியின் ஒரு உருவகமாக கூட கருதலாம்.


//கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி

கடல் உள்ள போறவன் நான் இல்லடி

கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி

கரை கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

என் உயிரோட ஆதாரம் நீதானடி//


//கன்னம் சுருங்கிட நீயும்

மீசை நரைத்திட நானும்

வாழ்வின் கரைகளைக் காண்போம்//


இவ்வுலகின் ஆதாரமே காதல்.


- பாரதி ஆ.ரா

என்றும் என் தோள் பிரியா தவர்

நட்சத்திரம் 6 🌟



நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;

- கபிலர்


பிரிட்டன் நாட்டில் இன்று சூரியன் உதித்தது. அங்கு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் ஒருவர், தன் இணையை பிரிந்து கடலுக்கு செல்கிறார். அவர் சென்ற கப்பல் விபத்து காரணமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொலை தொடர்பு துண்டிக்கப்படுகிறது. கரையில் அவருக்காக காத்திருக்கும் அவரது இணை, அவரது பிரிவில் அல்லலுறுகிறார். எழுத்தாளரான அவர், வழக்கமாக அவர்கள் சந்தித்துக் கொள்ளும் cafe ல் நாள் முழுக்க அமர்ந்து இருக்கிறார். அவரை தொடர்பு கொள்ள அவர் பணியாற்றிய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தொடர்ந்து call பண்ணி கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவரோட சென்ற ஒரு நபர் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளதாக சொல்கிறார்கள். அவர் மீண்டு வருவது சிரமம் தான் என்று சொல்கிறார். 

சங்ககாலத்தின் இரவில் நிலவு சுடர் விட்டு எரிகிறது. கபிலர் ஒரு பெண்ணைப் பற்றி பாடுகிறார். 

பிரிட்டன் தலைவிக்கு சங்ககாலத்து காதலி/தலைவி பதில் அளிக்கிறாள். மணம் செய்து கொள்ளாமல் உடன்போகி (dating) கொண்டிருக்கும் காதலர்கள் அவர்கள். அவளிடம் அவள் காதலன் உனை விட்டு பிரியப் போவதாக அவரது தோழி கூறுகிறாள். 

என் காதலன் எப்போதும் அவன் சொன்ன வாக்கை காப்பாற்றுபவன். எந்த சூழ்நிலையிலும் இனிமையானவன். என் தோளை விட்டு பிரிய மனமில்லாதவன். அது மட்டுமல்ல அவன் என்னை அளவு கடந்து காதலிக்கிறான். அவனைவிட அளவுகடந்து நான் அவனை காதலிப்பதை அவனும் நன்கு அறிவான். அவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது என்பதை அவனும் நன்கு அறிவான். இந்த உலகிற்கு நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு அவன் எனக்கு முக்கியம் என்பதை அறிவான். ஆதலால் அவன் என்னை விட்டு பிரியமாட்டான் என கண்ணீரை துடைத்துக் கொள்கிறாள். 

நீர் வாழ் தாவரங்களில் சிறந்த தாவரமான தாமரை போன்ற ஆண். நிலத்தில் வளரும் தாவரங்களில் சிறந்த சந்தன மரம் போன்ற பெண். 

அந்த தாமரை மலரிலிந்து, சந்தன மரத்தில் கட்டப்பட்ட தேன் கூட்டைப் போன்று அவ்வளவு இனிதானது அவர்களது காதல். 

பிரிட்டன் நாட்டு சூரியன் மீண்டும் உதித்தது. 

நீண்ட தேடுதலுக்கு பிறகு அந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் மீட்கப்பட்டார். 

பிரிந்திருந்த காதல் இணை மீண்டும் சேர்ந்தார்கள். ஆனால் அந்த ஆராய்ச்சியாளர் ஒரு நீர்வாழ் உயிரி போல தான் மீண்டு வந்தார். அவரின் மரணம் அவரது சுவாசத்தில் கலந்துவிட்டது. நிலத்தில் இருந்த அவரது எழுத்தாளரான காதலி தான் சுவாசிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். 

காதலில் சத்தியங்கள் தவறுவதில்லை. 

காதலர்கள் சொன்ன சொல்லில் இருந்து மாறுவதில்லை. 


நின்ற சொல்லர். நீடு தோறு இனியர்

என்றும் என் தோளைப் பிரியா தவர்.


- பாரதி ஆ.ரா.

பிரியும் நேர பிரியம்

நட்சத்திரம் 🌟5



குக்கூ என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் —
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

–அள்ளூர் நன்முல்லை

குறுந்தொகை 157


Judgement day போல எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு ஒன்று உண்டு. எல்லாம் ஒருநாளில் முடிவுக்கு வரக்கூடும். மீண்டும் கூட துளிர்க்கலாம். 

இப்படியாக தான் தோளோடு தோள் சேர்த்து கட்டி அணைத்தவாறு இருந்த காதலர்களை பிரிப்பதற்கான ஒரு நாளின் விடியல், வாள் போல் வந்தது. 

விடிவதன் பொருட்டு கோழி கூவியது. அதை கேட்டு திடுக்கெட்டு ஆனது நெஞ்சம். இன்று இவரை பிரியப்போகின்றோம் என்ற பதட்டம் இந்த காலைப் பொழுதை துயரமாக்கியது.


- பாரதி ஆ.ரா

நிலத்தினும் பெரிதே

நட்சத்திரம் 4 🌟



நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே 

- தேவகுலத்தார்

குறுந்தொகை 3


"நீ ஏன்டி அவன் மேல இவ்ளோ கிறுக்கா இருக்க? அவனும் அவன் மூஞ்சியும். பைத்தியம் மாதிரி ஏதாவது பேசிட்டு கிறுக்கிட்டு இருக்கான். அவனபோய் எப்படிடீ நீ லவ் பண்ணி தொலைச்ச?" என தோழி தலைவியைப் பார்த்து திட்டிக்கொண்டிருக்கிறாள். 

காதல் மயக்கத்தில் இருக்கும் தலைவி ஈராயிரம் ஆண்டு பழைய ஒயினை பருகியவாறே பதில் சொன்னாள். 

"நான் அவனை லவ் பண்றேன். குறிஞ்சி பூவில் இருந்து தேனெடுக்கும் மலைக் கிராமத்தை சேர்ந்த என் தலைவன் மீது கொண்ட இந்த லவ், இந்த வானம், பூமி, கடல் எல்லாவற்றையும் விட பெரியது."

எல்லாவற்றையும் விட பெரியது. உயர்வானது என ஒரு உறவு தோன்ற காரணம் என்ன? காதலன்றி வேறில்லை எனலாம். 

ஆனால் உண்மையில் ஒருவரிடம் நாம் உணருகின்ற பாதுகாப்புணர்வு தான் மற்ற எல்லாவற்றையும் விட பெரிதாக தோன்றக்கூடும். 

தலைவியை தலைவன் கரங்களால் இறுக அணைத்துக் கொண்டான். இது நாள் வரை தலைவி வாழ்ந்த இந்த உலகைவிட, தலைவனின் கரங்களுக்குள் இருக்கும் போது பாதுகாப்பாக, சுதந்திரமாக, மரியாதையாக உணருகிறாள். அப்போது அவளுக்கு இந்த பிரபஞ்சமே சிறு துண்டு தான். 


பெரும் தேன் இழைக்கும் நாடனின் நட்பு

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று. 


- பாரதி ஆ.ரா